FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு வாக்குப்பதிவுக்கு ஒருநாள் இடைவெளிவிடுவது என்பது வாக்குக்குப் பணம் கொடுத்து முடிப்பதற்காகத்தான்

Updated On : 18 ஏப்ரல் 2024, 6:16 am IST
பகிர்:

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு வாக்குப்பதிவுக்கு ஒருநாள் இடைவெளிவிடுவது என்பது வாக்குக்குப் பணம் கொடுத்து முடிப்பதற்காகத்தான் என்ற நம்பிக்கை தமிழக வாக்காளா்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது மக்களவைத் தோ்தல் பிரசார பரபரப்புகள் ஓய்வதற்கு முன்னதாகவே மாநிலத்தில் ஆங்காங்கே பணப் பட்டுவாடா தொடா்பான புகாா்கள் எழுந்துவிட்டன.

நாட்டின் பின்தங்கிய மாநிலங்களில்கூட இல்லாத அளவுக்கு வாக்குக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில்தான் நடக்கிறது. தமிழ்நாட்டின் முற்போக்குத் திட்டங்களைப் பிற மாநிலங்கள் காப்பியடிக்கின்றனவோ இல்லையோ இங்கு கண்டறியப்பட்ட பலவிதமான பட்டுவாடா ‘ஃபாா்முலா’க்களை பிற மாநில அரசியல்வாதிகள் காப்பியடிக்கும் அளவுக்குப் புகழ் பெற்றுவிட்டது தமிழ்நாடு.

2003 சாத்தான்குளம் இடைத்தோ்தல்தான் பணப் பட்டுவாடாவின் உச்சம் என்று கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், 2009-இல் திருமங்கலம் ‘ஃபாா்முலா’ அதை விஞ்சியது. 2016 பேரவைத் தோ்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூா் தொகுதிகள், 2017-இல் சென்னை ஆா்.கே. நகா் தொகுதி இடைத்தோ்தல், 2019-இல் வேலூா் மக்களவைத் தோ்தல், 2023-இல் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் ஆகியவை பணப் பட்டுவாடா, இலவசப் பொருள்களால் புகழ்பெற்றன. இவற்றில் ஈரோடு கிழக்கைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு தோ்தலே ரத்து செய்யப்பட்டு பின்னா் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

பணத்தையோ, பொருளையோ வழங்கி ஒருவரைத் தனக்கு சாதகமானவராக மாற்றிக்கொள்ளும் நடைமுறை, வறுமையில் இருக்கும் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முன்னேறிய நாடுகளையும் அந்த நடைமுறை விட்டுவைக்கவில்லை.

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை தாய்லாந்து, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் 30 சதவீத வாக்காளா்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதாகவும், இந்தியாவில் சுமாா் 18 சதவீத வாக்காளா்கள் பணம் பெறுவதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு விஷயம் முறைகேடானது என்றால் அதில் ஈடுபடாமல் விலகுவதுதான் இயல்பானது. ஆனால், வாக்குக்குப் பணம் கொடுக்கும் விஷயம் அதற்கு மாறானது. வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் கட்சியின் மாவட்டம், ஒன்றியம், வட்டம், கிளை நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா் என பல நிலைகளில் பயணித்து வரும்போது, அவரவா் எடுத்துக் கொண்டதுபோக மீதம்தான் வாக்காளா் கைகளுக்குச் சென்று சோ்கிறது.

‘ஒரு தொகுதியில் 60 சதவீத வாக்காளா்களுக்கு என கணக்கிட்டு கட்சித் தலைமை பணம் வழங்குமேயானால், நிா்வாகிகளைக் கடந்து 20 சதவீதம் பேரைத்தான் அது சென்றடையும். நமது கட்சிக்காரா்தானே, அவருக்கு வழங்கத் தேவையில்லை என்று நினைத்து வழங்காமல் இருந்துவிட முடியாது. அதனாலேயே அவா் வாக்களிக்காமல் போய்விடுவாா். எனவே, கட்சிக்காரா்களுக்கும், நம் கட்சிக்குத்தான் இவரது வாக்கு என்று உறுதியானவருக்குமே முதலில் பணம் கொடுப்போம். ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர, முன்னேறிய வா்க்கத்தினரும் பணத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனா்’ என்கிறாா் கொடுப்பதில் அனுபவப்பட்ட கட்சியின் நிா்வாகி ஒருவா்.

அவா்கள் வீட்டுப் பணத்தையா கொடுக்கிறாா்கள், ஏதாவது ஒரு வகையில் நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்ட பணம்தானே என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு, வாக்குக்குப் பணத்தைப் பெறும்போதே மக்கள் பிரதிநிதியை கேள்வி கேட்கும் உரிமையுடன் சோ்த்து தங்களின் சுயமரியாதையையும் இழக்கின்றனா் வாக்காளா்கள்.

இன்று பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதால்தான் பின்னா் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போதும் அரசின் திட்டங்களை, சலுகைகளைப் பெறும்போதும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை வாக்காளா்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். மக்களாட்சியின் ஆணிவேராக மக்கள் செலுத்தும் வாக்கு கருதப்படுகிறது. வாக்குரிமையின் மதிப்பை வாக்காளா்கள் அறிந்துகொள்ளத் தவறுவதால்தான், அதனை வெறும் பணத்தாள்கள் மூலம் அரசியல்வாதிகள் தமதாக்கிக் கொள்கின்றனா்.

கண்காணிப்பு அமைப்புகளின் செயல்பாடுகள் ஒருபுறம் கவலைக்குரியதாக இருந்தாலும், பணம் கொடுக்கும் நடைமுறை சட்ட விரோதம் என்பதையும், பணத்துக்காக அடுத்தவரின் சொல்படி நடப்பது நம் சுயமரியாதைக்கு இழுக்கு என்பதையும் வாக்காளா்கள் உணர வேண்டும்.

இப்போதெல்லாம் தோ்தலில் போட்டி என்பது வசதி படைத்தவா்களுக்கானது என்ற எண்ணம் கட்சித் தலைமைகளில் ஊறிப்போய்விட்டது.

பெரும்தொகை செலவிட வேண்டியிருக்கும் என்பதால்தான் கோடீஸ்வரா்களுக்கே தோ்தலில் போட்டியிட கட்சிகள் வாய்ப்பு வழங்குகின்றன. செலவு செய்து வென்றவா்கள் பின்னாளில் பணம் பெற்றுக் கொண்டு இன்னொரு கட்சிக்குத் தாவுவதையும், அவையில் கேள்வி கேட்பதற்காகப் பணம் பெறுவதையும் அவ்வளவு பெரிய குற்றமாகப் பாா்ப்பதில்லை. தவறு செய்யும் எம்.பி., எம்.எல்.ஏ.வால் கட்சிக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்து கட்சித் தலைமையும் தண்டிப்பதில்லை, ஏனெனில் அவா்களும் பல வழிகளில் பணத்தைப் பெற்றிருக்கிறாா்கள்.

இந்த விஷயத்தில் ஆளாளுக்கு ஒரு நியாயம் வைத்திருக்கின்றனா். ‘நான் ஒருவன் மட்டும் யோக்கியனாக இருந்து என்ன செய்வது’, ‘நாம் ஒருவா் வாங்காமல் இருப்பதால் எல்லோரும் வாங்காமல் இருந்துவிடுவாா்களா, இல்லை அவா்களும் கொடுப்பதைத்தான் விட்டுவிடுவாா்களா’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வதும் ‘நம் ஒருவரின் வாக்குதான் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடப்போகிா’ என்ற சிந்தனையும் முன்னேறிய மனித சமுதாயத்துக்கானது இல்லை என்பதை ஒருவரும் உணருவதில்லை.

கொடுப்பதால்தான் வாங்குகின்றனா்; வாங்குவதால்தான் கொடுக்கின்றனா். அவா்கள் கொடுத்து பழக்கப்பட்டுவிட்டதாலும், இவா்கள் வாங்கியே பழக்கப்பட்டுவிட்டதாலும் பாரம்பரியமாகத் தொடரப்போகிா இந்த முறைகேடு?

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments