FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

ஒரு மாத காலத்தை நிறைவு செய்த விஜய் அரசு!

ஒரு மாத காலத்தை நிறைவு செய்திருக்கும் முதல்வர் விஜய்யின் தவெக அரசு பற்றி...

Updated On : 11 ஜூன் 2026, 5:19 pm IST
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் - ANI
பகிர்:

தமிழக பேரவைத் தேர்தலில் வென்று, ஒரு மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றி, ஆட்சியமைத்து ஒரு மாத காலத்தை நிறைவு செய்து இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு.

ஓர் அரசு பொறுப்பேற்று, மாற்றங்கள் நிகழ, ஒரு மாத காலம் என்பது மிகக் குறைந்த நாள்கள்தான். என்றபோதும், என்னென்ன நிகழ்ந்திருக்கின்றன என்றொரு பார்வை.

பேரவைத் தேர்தலில் போட்டியிடும்போது, தவெக கொடுத்த வாக்குறுதிகள், தற்போது அரசின் கொள்கைகளாக மாறியிருக்கிறதா? இந்த ஒரு மாதத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

Advertisement

Advertisement

தமிழக வரலாற்றில் மே 4 ஆம் தேதி ஒரு மிகப் பெரிய திருப்புமுனை. ஆளும் திமுக தோல்வியடைந்து, தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்று மே 10 ஆம் தேதி ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு இரண்டு காரணங்கள் அடிப்படையாக அமைந்திருந்தன எனலாம் - விஜய்யின் திரையுலகப் புகழ் மற்றும் வெகு காலமாக மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்கள்.

முதல்வரும் அமைச்சர்களும்

மே 10 அன்று முதல்வர் விஜய் உடன் செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிறகு கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுக்குப் பதவி கொடுக்கும் வகையில் அமைச்சரவை 35 பேராக விரிவாக்கம் செய்யப்பட்டது.

தேனிலவுக் காலம்

தவெக அரசின் தேனிலவுக் காலம் எனப்படும் முதல் ஒரு மாத காலத்தின் முதல் ஒரு வாரம், அரசையும் தாண்டி, தவெக எம்எல்ஏக்களின் ஆய்வுகள், விளக்க விடியோக்கள் என்று இருந்தது; பிறகு அந்தப் போக்கு சற்றுக் குறைந்தது.

தவெக கொடுத்த வாக்குறுதிகள்

200 யூனிட் இலவச மின்சாரம் - மின் கட்டணத்தில் 200 யூனிட் மானியம் என்பது அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 500 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்துவோருக்குத்தான் என தவெக அரசு அறிவித்தது.

மகளிர் உரிமைத் தொகை - திமுக கொடுத்துவந்த மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வருமா? என எதிர்பார்த்த மகளிருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உரிமைத் தொகை வழக்கம் போல வரவு வைக்கப்பட்டது. ஆனால், ரூ. 2,500 பற்றி இன்னமும் அறிவிப்புகள் எதுவுமில்லை.

வேளாண் கடன் தள்ளுபடி - சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் 2025, மே 1 முதல் 2026, பிப். 28-ஆம் தேதி வரை பெற்ற பயிா்க் கடனில் ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தார்.

பயிா்க் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவ்வாறு முற்றிலும் தள்ளுபடி செய்யப்படவில்லை. நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று முதல்வர் விஜய், தேர்தல் பிரசாரத்தின் போது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தவெக ஆட்சியில், கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலைச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.

சிங்கப் பெண் அதிரடிப் படை - முதல்வர் விஜய் அறிவித்தபடி, சில முறை விழா ஒத்திவைக்கப்பட்டுத் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் இந்தப் படையின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்குத் தெரிய வரும். வரவேற்பையும் பெறலாம்.

செய்தியாளர் சந்திப்பு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இதுவரையிலும் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. அவரது பதிலை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் வருங்காலத்தில் இந்த நிலை மாறும் என்றே எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்காதது என்ன?

தவெகவின் வெற்றிக்கு முந்தைய அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியும் மிக முக்கிய காரணம். எனவே, திராவிடக் கட்சிகளின் அரசியலை எதிர்பார்க்காத மக்கள், ஆக்கப்பூர்வமான பணிகளில் தவெக மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் எனக் கருதுகின்றனர்.

தவெக அரசுக்கு தேனிலவுக் காலம் என 6 மாத காலத்தை எதிர்க்கட்சிகள் கொடுத்திருக்கின்றன. ஆனால், மக்கள் அதிகம் எதிர்பார்ப்பதால், தேனிலவுக் காலத்திலும் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் தவெக அரசு இருக்கிறது. இதுவே, வேட்பாளர்களையோ, பணத்தையோ, பொருளையோ என எதையும் எதிர்பார்க்காமல் வெறும் தவெகவுக்கும் விஜய்க்கும் விசிலுக்கும் வாக்களித்த மக்களின் எண்ணம்; நிறைவேற்றப்பட வேண்டியவையும்கூட!

summary

Vijay Arasu completes one month in office!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments