முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் எத்தனை நாள்கள் செல்லும்?

ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் எத்தனை நாள்கள் செல்லுபடியாகும் என்பது பற்றி..

Updated On : 22 ஜனவரி 2026, 9:26 am IST
இ-சேவை மையங்கள் - ENS
பகிர்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு பெறுவதற்காக வழங்கப்படும் ஓபிசி-என்சிஎல் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஓபிசி சான்றிதழ் என்பது, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினரை உறுதிப்படுத்துவதாகும். அதாவது ஓபிசி பிரிவைச் சேர்ந்த நான் கிரீமிலேயர் அல்லாத பிரிவினர் என்பதை உறுதி செய்வதற்காக வழங்கப்படுகிறது.

மத்திய கல்வி நிலையங்கள், அரசுப் பணிகள் போன்றவற்றில் இதற்கான இட ஒதுக்கீட்டைப் பெற ஓபிசி-என்சிஎல் சான்றிதழ் கட்டாயமாகிறது. இந்த சான்றிதழைப் பெற, விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அதன்படி, ஓபிசி பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பெற இந்த சான்றிதழ் அவசியம்.

Advertisement

Advertisement

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்து, ரூ.8 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் பெறும் எவர் ஒருவரும் இந்த சான்றிதழைப் பெறலாம்.

அதுவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்து ரூ.8 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டினால், அவர்கள் கிரீமிலேயர் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பெற்றோர் மற்றும் விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் இயங்கும் அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று ஓபிசி-என்சிஎல் சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு சென்றால், அவை ஸ்கேன் செய்து, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சான்றிதழ்கள் விண்ணப்பதாரரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். அல்லது அரசின் இ-சேவை இணையதளத்தில் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்று அறிய..

விண்ணப்பித்த ஒரு வார காலத்தில், சான்றிதழ் வழங்கப்படும். இது ஒரு நிதியாண்டுக்கு செல்லுபடியாகும். உதாரணமாக 01.04.2026 - 31.03.2027 வரை ஒரு ஓபிசி-என்சில் சான்றிதழ் செல்லுபடியாகும்.

ஆனால், ஓபிசி - என்சிஎல் சான்றிதழ் எப்போது வாங்கியிருந்தாலும் அது, அந்த ஆண்டின் மார்ச் 31ஆம் தேதியோடு காலாவதியாகும். ஏப்ரல் 1ஆம் தேதி வாங்கினால் 365 நாள்கள் வரை அது செல்லுபடியாகும். ஆனால், அதுவே மார்ச் 30ஆம் தேதி வாங்கினால் ஒரே ஒருநாள் மட்டுமே மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

இப்போது மாணவர்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீட், ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஓபிசி-என்சிஎல் தேர்வு பெற்று விண்ணப்பித்த மாணவர்கள், இதனை கலந்தாய்வுக்குப் பயன்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பலாம். ஆனால், இதற்கு என்டிஏ கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், தேர்வெழுத ஓபிசி-என்சிஎல் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தவர்கள், மே மாதம் நடைபெறும் கலந்தாய்வின் போது இதே சான்றிதழை இணைக்க முடியாது. கலந்தாய்வின்போது புதிதாக விண்ணப்பித்துத்தான் சேர்க்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எனவே மாணவர்கள் கலந்தாய்வுக்கு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மாதத்திலேயேகூட, புதிய ஓபிசி-என்சில் சான்றிதழுக்கு விண்ணப்பித்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். அது அடுத்து ஆண்டு மார்ச் மாதம் வரை செல்லுபடியாகும்.

summary

About how many days the OBC-NCL eligibility certificate is valid..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.