குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் சூர்யா!
தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்டுள்ள சூர்யா,
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் களத்தில் இந்து மக்கள் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்டுள்ள சூர்யா, வழக்கமான தேர்தல் வாகனங்களைத் தவிர்த்து குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் ஆணைக்கிணங்க இந்தத் தேர்தலைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட அவர், "ஊழல்வாதிகளை 'குதிரை வேகத்தில்' துரத்தவே இந்த வித்தியாசமான பாணியைக் கையாண்டதாகத் தெரிவித்தார். அதிகார மையங்களில் நிலவும் பணப் பரிமாற்றங்களையும், அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் நேரடியாகச் சாடிய அவர், இது வெறும் தேர்தல் மட்டுமல்ல, ஒரு தர்ம யுத்தம் எனக் கூறினார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் திராவிடக் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தை 'பணநாயகமாக' மாற்றி உள்ளதாகச் சுட்டிக்காட்டிய சூர்யா, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் உச்சத்தை எட்டி உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
Advertisement
Advertisement
குறிப்பாக, எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியும் மாறி, மாறி ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்கிற்குப் பத்தாயிரம் ரூபாய் வரை பேசப்படுவதாகவும் அவர் பகிர் தகவலை வெளியிட்டார். எங்களிடம் பணம் இல்லை, ஆனால் மக்களின் ஆதரவு இருக்கிறது. மக்கள் பணத்தை வாங்கிக் கொள்ளட்டும், ஆனால் வாக்களிக்கும்போது மாற்றத்திற்காக எங்களுக்கே வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
நொய்யல் நதியை இணைப்பது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலத்தை மாற்றி, மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவே தான் போட்டியிடுவதாக அவர் கூறினார்.
சாமானிய மனிதர்கள் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிப்பதே தனது இலக்கு என்று உறுதியுடன் கூறினார்.