மயிலாப்பூரில் பிரதமர் மோடி சாலைவலம்!
மயிலாப்பூரில் பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொள்ளவுள்ளது பற்றி...
சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டு பிரசாரம் செய்யவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று காலை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி மயிலாப்பூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக சாலைவலம் சென்று பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், மயிலாப்பூர் தொகுதியும் அடங்கும். இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில், மயிலாப்பூரில் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மதுராந்தகம், மதுரை, வேலூர், திருச்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அடுத்த சில நாள்களில் கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.