ஆந்திரத்தில் ரூ. 5,000 கோடி விமான நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 5,000 கோடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளது பற்றி...
ஆந்திரத்தில் விஜயநகரம் அருகே ரூ. 5,000 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) திறந்து வைத்தார்.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைக்கிறார்.
விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
Advertisement
Advertisement
இந்த விழாவில் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோரும் பங்கேற்றனர்.
முதல் கட்டமாக ஆண்டுக்கு அறுபது லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை, வரும் காலங்களில் ஆண்டுக்கு 4 கோடி பயணிகள் வரை பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தத் திட்டமிருக்கிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இது இணைப்பை வலுப்படுத்தி, ஆந்திரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும்.
இந்த விமான நிலையம், தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இது சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும். மேலும், இந்த விமான நிலையத்தின் முனையக் கட்டடம் ஆந்திரத்தின் கலாச்சார அடையாளத்தையும் போற்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு மாநிலங்களிலும் சுமார் ரூ. 18,000 கோடி மதிப்பிலான திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா, தொடக்க விழாக்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Narendra Modi has inaugurated an airport in Andhra Pradesh built at a cost of ₹5,000 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.