12.8.1976: இலங்கையில் தமிழர் ஆர்ப்பாட்டம் - போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
கொழும்பு, ஆக. 11 - யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தமிழர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் சுட்டதில் ஒரு தமிழ் இளைஞர் மாண்டார்.
வன்முறையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின்பேரில் இரண்டு ஆண்டுகளாக காவலில் வைத்திருக்கும் 20 தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணை நடத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்களில் சிலர் இரண்டு நாளாக சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்ணாவிரதமிருக்கும் இளைஞர்களுக்கு அனுதாபமாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Advertisement
Advertisement
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு அரசு பஸ்ஸுக்கு தீ வைத்ததாகவும், போலீஸார் திருப்பிச் சுட்டதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் இறந்து விட்டதாகவும் போலீஸார் கூறினர்.
மற்றொரு தமிழ் பேசும் கிழக்கு மாகாணத் தலைநகரான பட்டிகோலாவிலும் இதேமாதிரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு ஒரு பஸ் கொளுத்தப்பட்டது.
12 அடி ஆழ பள்ளத்தில் லாரி உருண்டு 4 பேர் பலி; மற்றும் நால்வர் காயம்
சென்னை, ஆக.11- ஹோசூர் பெங்களூர் சாலையில் சின்னார் என்னுமிடத்துக்கருகில் நேற்று ஏற்பட்ட ஒரு லாரி விபத்தில் டிரைவர், கிளீனர் உட்பட 4 பேர் மாண்டனர். மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.
அந்த லாரி தெங்கனிகோட்டையிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. சின்னார் அருகே லாரியின் முன்பக்க சக்கரத்தின் டயர் வெடித்ததன் விளைவாக லாரி 12 அடி ஆழ பள்ளத்துக்குள் உருண்டு விழுந்தது என்றும் லாரி டிரைவர் மெஹபூப் (26 வயது) கிளீனர் அன்ஸோர் (23 வயது) ஆகியோரும் லாரியில் இருந்த கப்பார் (20 வயது ) அக்ராமி (16 வயது) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே மாண்டனர் என்றும் கூறப்படுகிறது. 4 சடலங்களும் லாரிக்கடியில் சிக்கியிருந்தன. லாரி உரிமையாளர் உட்பட 4 பேர் விபத்தில் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக பெங்களூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹோசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்ஜேம்ஸ் பொதுமக்கள் உதவியுடன், லாரிக்கடியில் இருந்த சடலங்களை அகற்றினார். தர்மபுரி போலீஸ் சூப்ரென்டென்ட் முகர்ஜி, ஹோசூர் உதவி போலீஸ் சூப்ரென்டென்ட் சக்ஷஷ்மால் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த விபத்து குறித்து ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சப்இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உதவியுடன் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் புலன் விசாரணை செய்து வருகிறார்.
12.8.1976: One person killed in police firing during a Tamil protest in Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.