புதுடில்லி, பிப்.15 - புறநகர் ரயில் சர்வீஸ்கள், சீஸன் டிக்கட்டுகள் போன்ற "சமூக பொறுப்புகள்" காரணமாக, ரயில்வேக்கள் ஏற்க வேண்டியுள்ள நஷ்டம் 1970-71-ம் ஆண்டில் ரூ. 169 கோடியாக இருந்தது. 1974-75-இல் ரூ. 382 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆனால், நடப்பு நிதியாண்டில் ரூ. 138 கோடியாகக் குறையுமென்று எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே போர்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தகைய "சமூகப் பொறுப்புகள்" பற்றிய எல்லா அம்சங்களையும், ரயில்வே நடைமுறைகள் கமிட்டி பரிசீலித்துப் பார்த்தது. இதுசம்பந்தமாக ஏற்படும் நஷ்டங்களை ஈடு செய்வதற்காக, ரயில்வேக்கு மானிய உதவி அளிக்கும் விஷயத்தை உயர் அதிகாரி கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், அந்தக் கமிட்டியில் ரயில்வே போக்குவரத்து, நிதி இலாகாக்களின் பிரதிநிதிகள், மற்றும் ஆடிட்டர் ஜெனரல், ராஜ்ய சர்க்கார்கள், ஸ்தல ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இருக்க சமீபத்தில் வேண்டுமென்றும் அது சிபாரிசு செய்துள்ளது.
இந்த விஷயத்தில் பிரிட்டன், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி முதலிய நாடுகளில் கையாளப்படும் நடைமுறைகளைக் கருத்திலிருத்தி, ரயில்வேக்கு மானிய உதவி அளிப்பதற்கான அனுபவ சாத்தியமான நிதி ஏற்பாடு ஒன்றை வகுக்கும் பணி இந்தக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டலாம் என்றும் ரயில்வே நடைமுறைகள் கமிட்டி யோசனை கூறியுள்ளது. மாநகர் பகுதிகள் புறநகர்களுக்கு (சபர்பன்) ரயில்கள் விடுவாதால், ரயில்வேக்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுவதாகவும், இதனால் ஏற்படும் நஷ்டம் 1970-71-இல் ரூ.12 கோடியிலிருந்து 1974-75-இல் ரூ. 19 கோடி ஆக அதிகரித்திருப்பதாகவும், நடைமுறைகள் கமிட்டி சுட்டிக் காட்டியுள்ளது. மாதாந்திர கால் வருஷ சீஸன் டிக்கெட்டுகளுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் கட்டணம் அமைந்திருப்பதை அது விசேஷமாகச் சுட்டிக்காட்டுகிறது. தவிர, அவ்வப்போது ரயில்வே கட்டண விகிதங்கள் உயர்த்தப்படும்போது, இந்த சீஸன் டிக்கெட்டுகளுக்கு விலக்களிக்கப்படுவதாகவும் அது கூறுகிறது. அப்படியே உயர்த்தினாலும் பெயரளவில்தான் உயர்த்தப்படுவதாகவும் அது கூறுகிறது. ...
சோமங்கலம், பிப். 15 - கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. அந்த இழப்பை அது ஈடுகட்ட வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
இங்கு 10 கிராமங்கள் சம்பந்தப்பட்ட கிராமப் புனரமைப்புத் திட்டம் ஒன்றை அவர் ஆரம்பித்து வைத்தார்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு வளர்ச்சி வேகத்திலும் மற்ற அம்சங்களிலும் இந்தியாவிலேயே முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாகக் கடந்த சில ஆண்டுகளில் அது மிகவும் பின்னடைந்துவிட்டது. மிகவும் கீழே இருந்த மற்ற பல மாநிலங்கள் தமிழ்நாட்டை முற்திக் கொண்டு மேலே வந்து விட்டது. ஆகவே இந்த இழப்பை தமிழ்நாடு ஈடு கட்டவேண்டும் என்று அவர் கூறினார்.
பிரதமரின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிராமப் புனரமைப்புக்காக செங்கற்பட்டு ஜில்லாவில் சோமங்கலம் பகுதியில் (சோமங்கலம் சென்னையிலிருந்து 32 கிலோ மீட்டர் அதாவது 20 மைல் தூரத்தில் இருக்கிறது) -10 கிராமங்களைத் தமிழ்நாடு அரசாங்கம் இத் தேர்ந்தெடுத்திருக்கிறது. திட்ட பகுதியில் 1,10,000 மக்கள் வாழ்கிறார்கள். 2500 ஹெக்டேர்கள் (6250 ஏக்கர்) நிலம் இருக்கிறது.
ஒரு காலத்தில் ஹரியானா மிகவும் பின்னடைந்த பகுதியாக இருந்தது. ஆனால் அம்மாநில முதல்வரும் அரசாங்கமும் எடுத்துக் கொண்ட பெருமுயற்சி களின் காரணமாக இப்போது அது மிகவும் முன்னேறி வந்து விட்டது. இன்று இந்தியாவிலேயே மிகவும் முன்னடைந்த மாநிலங்களில் ஹரியானா ஒன்றாக விளங்குகிறது என்று பிரதமர் சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.