30.7.1976: கிராம மக்கள் கடன் நிவாரண சட்டம் அமல் - ரூ. 2400 குடும்ப வருமானமுள்ளோர் எல்லாக் கடன்களும் ரத்து
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, ஜூலை. 29 - கிராம மக்களின் கடன் தொல்லைகளை நீக்கும் திட்டத்தின் இரண்டாவது சட்டமாக தமிழ்நாட்டில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 1976-ம் வருட தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள எளிய மக்களின் எல்லாக் கடன்களையும் ரத்து செய்ய வகை செய்யப்பட்டிருக்கிறது. இச் சட்டம் தமிழ்நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வருகிறது.
கிராம மக்களின் கடன் தொல்லைகளை நீக்கும் திட்டத்தின் முதல் கட்டம் எளிய மக்கள் வாங்கியுள்ள எல்லாக் கடன்களையும் திருப்பித் தருவதற்கான காலத்தை நீட்டித்து, கால நீட்டிப்புச் சட்டங்களை நிறைவேற்றியது ஆகும்.
இரண்டாவது கட்டமாக எளிய மக்களின் அனைத்துக் கடன்களையும் ரத்துச் செய்ய இந்த ராஷ்டிரபதியின் சட்டம் வகை செய்கிறது.
Advertisement
Advertisement
பயனடைவோர் விவரம்
இச்சட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2400 -க்கு மேற்படாத குடும்ப வருமானம் (அதாவது குடும்பத்தில் உள்ள அனைவருடைய அனைத்து வழியாக வரும் மொத்த வருமானம்) உள்ள- 1. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், 2. கிராமப் புறக் கைவினைஞர்கள், 3. சிறு விவசாயிகள் ஆகியோர் கடன் சுமையிலிருந்து முற்றிலும் நிவாரணம் பெறுவார்கள். குடும்பம் என்பது கணவன், மனைவி, திருமணமாகாத மைனர் குழந்தைகள் முதலானோர் அடங்கியதாகும்.
சிறு விவசாயி என்பவர் மலை ஜாதியினராக இருப்பின்- 2 யூனிட் விவசாய நிலமும், மற்றெல்லாருக்கும் 1 யூனிட் நிலமும் சொந்தமாகவோ, குத்தகையாகவோ அல்லது சுவாதீன அடமானமாகவோ பெற்றிருந்து அதன் மூலம் தனது வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுபவர். ...
பல்லவர் கால கல் வெட்டுக்கள்: மதுராந்தகம் அருகே கண்டுபிடிப்பு
சென்னை, ஜூலை. 29- பல்லவர் காலத்து கல்தூண் ஒன்று மதுராந்தகம் தாலூகாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலூகாவில் ஓரத்தி என்னும் ஊர் உள்ளது. இங்கு இந்தக் கல்தூண் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் தூணை 'சும்மாய்' என்று அழைக்கிறார்கள்.
இந்தக் கல் தூண் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. அதாவது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
இந்தத் தூண் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் நக்கன் என்பவனால் செய்யப்பட்டது. இவன் ஈசுவர கோட்டத்து, நெடுங்கல் நாட்டு, ஆற்றூரைச் சார்ந்தவன். இந்தக் கல்தூணைக் கட்டிய கல் தச்சனின் பெயர் 'குவணன்' என்று கல்லில் எழுதப்பட்டுள்ளது. ...
30.7.1976: Rural Indebtedness Relief Act comes into force – all debts of families with an annual income of Rs. 2,400 are waived.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.