FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இப்படியெல்லாம் ஒரு நோயா? அதன் பெயர் 'ஃபைப்ரோ மையால்ஜியா'வா?

சமீபத்தில் என்னுடைய தோழி பத்மஜாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உடல் வலி அதிகம் இருக்கு,

30 ஜனவரி 2024, 6:32 pm IST
பகிர்:

சமீபத்தில் என்னுடைய தோழி பத்மஜாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உடல் வலி அதிகம் இருக்கு, என்ன மருந்து சாப்பிட்டாலும் குணமாகலை, போதிய அளவு ஓய்வும் எடுத்துட்டேன், பிறகு தான் தெரிந்தது எனக்கு ஃபைப்ரோ மையால்ஜியா வந்திருக்கு என்று’ என்றார் கூலாக. எனக்கு தலைசுற்றியது. என்னது என்று மறுபடி கேட்டதும் தெளிவாக சொன்னார்...fibromyalgia என்று. அப்படின்னா என்று அவளிடம் கேட்க கூச்சப்பட்டு கூகிளைக் கேட்டபோது அதில் கொட்டிக் கிடக்கின்ற தகவல்கள்.

மனிதர்களுக்கு புது புது பிரச்னைகள் வருவது போல நவீன வாழ்க்கையில் புதுப் புது நோய்களும் உற்பத்தியாகின்றன. டாக்டர்களை தெய்வமாக நம்பிய காலம் மாறி டாக்டர்களைப் பார்க்கவே அஞ்சி நடுங்கும் காலமாகிவிட்டது. இப்படி பெயரே பயமாக இருக்கும் ஒரு வியாதியைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பி அவளிடம் மீண்டும் கேட்டேன். அதன் அறிகுறிகளை முதலில் சொன்னாள்.

தொடர்ந்து தோள் வலி இருந்தது. உடலில் பல இடங்களில் ஒரே வலி. தசைப் பிடிப்பு மாதிரி. நீவி விட்டாலோ அல்லது சுளுக்கு என்று நினைத்து உருவி விட்டாலோ பிரச்னை அதிகமாகிடும். சிலருக்கு ஊசியால் குத்தியது போல வலிக்குமாம். உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த வலி எடுக்கலாம். உடலில் ஏழு இடங்களுக்கு மேலாக அதீத வலி ஏற்பட்டால் அதன் பெயர் ஃபைப்ரோ மையால்ஜியாவாம். 

Advertisement

Advertisement

முதலில் சாதாரண பிரச்னை என்று ஒதுக்கிவிட்டேன். ஆனால் வலி விடாமல் தொடரவே வேறு வழியில்லாமல் ஒரு டாக்டரிடம் சென்றேன். அவர் பரிந்துரைப்படி எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்த்தும் எல்லாம் சரியாக இருந்தது. பிரச்னை எதுவும் இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். மறுபடியும் வலி ஏற்படவே பிஸியோதெரபிஸ்டிடம் சென்றேன். அவர் பரிந்துரைத்தபடி ஒரு நிபுணரிடம் சென்ன போது இது fibromyalgia வாக இருக்குமென அந்த மருத்துவர் ஊகித்தார். சில ஊசிகளை (டிரிகர் பாயின்ட்ஸ் ஊசிகள்) போட்டும், அவர் பரிந்துரைத்த மாத்திரைகளை சாப்பிட்டதும் தான் வலி குறையத் தொடங்கியது. ஆனால் இன்று வரை முழுவதும் குணமாகவில்லை. அப்பப்போ வலி வரும். போகும்’ என்றார் இந்த வியாதிக்கு பழக்கப்பட்டுவிட்ட தோழி.

மேலும் அவர் கூறுகையில், 'சிலருக்கு மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள். பயிற்சியே செய்ய முடியாத அளவுக்கு வலி பின்னிக் கொண்டிருக்கும் போது எக்ஸர்சைஸ் என்ற சொல்லே எரிச்சலைத் தரும். ஆனால் தினசரி வாழ்க்கை முறையில் சில பல மாற்றங்களை செய்து நடைப்பயிற்சி டாக்டர் சொன்ன உடற்பயிற்சி இவற்றை செய்த பின் வலி நீங்கும். பல நாட்கள் தூக்கம் இல்லாமல், வேலை சார்ந்து அல்லது வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்துடன் இருந்தால் இயற்கையாக சுரக்கக் கூடிய செரட்டோனின் எனும் ஹார்மோன் குறைந்துவிடும், அல்லது செரட்டோனின் போதுமான நேரத்துக்கு உடலில் தங்காது, இதனால், சப்ஸ்டன்ஸ் பி அளவு அதிகமாகி, கடுமையான வலியை உண்டாக்குகிறது (உணர்ச்சிகளை மூளையிலிருந்து நரம்புகளின் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை `நியூரோ டிரான்ஸ்மீட்டர்ஸ்' என்கின்ற நரம்பியக் கடத்திகள் திறம்பட செய்துவருகின்றன. அதற்கு உதவுவது சப்ஸ்டன்ஸ் பி (substance p) மற்றும் செரட்டோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள்தாம் வலியைக் கடத்துவதில் முக்கியமானவை. சப்ஸ்டன்ஸ் பி, வலியை அதிகளவில் உணரச் செய்யவும், வலியுணர்ச்சியைக் குறைக்கவும் செரட்டோனின் பயன்படுகிறது). எனவே நன்றாகத் தூங்கி கவலை இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்'.

ஃபைப்ரோ மையால்ஜியா எந்த வயதினருக்கும் வரலாம் என்றாலும் 20 வயது முதல் 60 வயதுடைய பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றது என்கின்றன ஆய்வுகள். ஏன் வருகிறது என குறிப்பிட்ட காரணமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சப்ஸ்டன்ஸ் பி வேதிப்பொருள் அளவு அதிகரிப்பதாலும், உறக்கமின்மை, சோம்ல், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, துயர் சோகம் போன்ற நெகடிவ் மனப்பான்மையால் பீடித்திருப்பது போன்றவை சில காரணிகளாக அறியப்படுகிறது. தொடர் வேலையும், திருப்தியின்மையும், வாழ்க்கையில் ஏதோ ஒரு வெற்றிடம் இருப்பது போன்ற மனநிலையும் கூட இதற்கான காரணம் என்கிறார்கள் இந்த வியாதியில் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த ஃபைப்ரோ மையால்ஜியாவைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன நிலையில் இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வலியைத் தள்ளிப் போடவும், மறக்கவும் வைக்க முடிகிறதே தவர, வலி குறித்த அச்சம் இந்த நோயாளிகளுக்கு ஆழமாக மனத்தில் பதிந்துள்ளதால் உடலும் அதற்கேற்ற வகையில் முழு நிவாரணம் கிடைக்காமல் அவ்வப்போது படாத பாடு படுத்தி எடுத்துவிடும். எனவே இந்த நோய் குறித்த அச்சங்களை தவிர்த்து விழிப்புணர்வினை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்தியாவில் அதிகளவில் இல்லையென்றாலும் இதுதான் நோய் என்றே தெரியாமல் அவதியுற்று வருபவர்கள் பலர். 

வலிகள் அற்ற வாழ்வினை நாம் தான் நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அளிக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments