பதிமூன்று ரூபாயில் மூன்று வேளை சாப்பாடு: உத்தரப்பிரதேசத்தில் வந்தாச்சு 'அம்மா உணவகம்'!
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம் திட்டத்தைப் போலவே பொது மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் 'அன்னப்பூர்ணா' என்ற திட்டத்தை ...
லக்னோ: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம் திட்டத்தைப் போலவே பொது மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் 'அன்னப்பூர்ணா' என்ற திட்டத்தை உத்தர பிரதேச அரசு செய்லபடுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த 'அம்மா உணவகம்' திட்டமானது பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக பிற மாநிலங்களுக்கும் சென்று கொண்டு இருக்கிறது.பிற மாநில அதிகாரிகள் தமிழகம் வந்து, இத்திட்டம் குறித்தான விளக்கம் பெற்று அவர்களுடைய மாநிலங்களில் தொடங்கி செய்லபடுத்தி வருகிறார்கள். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உத்தரப்பிரதேச முதல்வ ராக உள்ள பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதும் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாநிலத்தில் ‘அன்னபூர்ணா கேன்டீன்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இது பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
Advertisement
அரசு துவங்கவுள்ள அன்னபூர்ணா உணவகமானது ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக செயல்படுத்தப்படுகிறது. இங்கே மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள், ஆகியோருக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படும்.
இவற்றில் காலை உணவு ரூ.3-க்கும், மதியம் மற்றும் இரவு உணவு தலா ரூ. 5-க்கும் என மொத்தம் 3 வேளை உணவும் சேர்த்து ரூ.13-க்கு வழங்கப்படும். காலையில் டீயுடன், இட்லி, சாம்பார், பருப்பு, பக்கோடா, கச்சோரி ஆகியவையும், மதியம், இரவில் 6 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு சால்னா ஆகியவை எவர் சில்வர் தட்டுகளில் வழங்கப்படும். அனைத்தும கேன்டீன்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதற்காக சுத்திகரிப்பு சாதனங்கள் நிறுவப்படும்.
தற்பொழுது மாநிலம் முழுவதும் 14 மாநகராட்சி பகுதிகளில் இந்த அன்னபூர்ணா கேன்டீன் தொடங்கப்படும். முதல் கட்டமாக லக்னோ, கான்பூர், கோரக்பூர், காசியாபாத் நகரங்களில் துவனாகவுள்ள இந்த திட்டமானது படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கென பயனாளிகளுக்கு பிரீபெய்டு கார்டுகள் மற்றும் டோக்கன்கள் ஆகியவை வழங்கப்படும்.
இவ்வாறு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.