முகப்பு
இந்தியா

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது: தமிழக காங்கிரஸ் கண்டனம்  

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஜூலை 2019, 6:47 pm IST
பகிர்:

சென்னை: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தால் பல்வேறு வன்முறை கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பட்டியலின மக்கள், ஆதிவாசிகள், சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வாரணாசிக்கு அருகில் உள்ள சோனாபத்ரா மாவட்டத்தில் ஆதிவாசிகளின் நிலத்தை கைப்பற்ற 24 டிராக்டர்களில் வந்த வன்முறைக் கும்பல் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

சோனாபத்ரா படுகொலையை கேள்விப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில பொறுப்பாளருமான திருமதி. பிரியங்கா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முயற்சி செய்திருக்கிறார். அவரையும் உடன் வந்த காங்கிரஸ் கட்சியினரையும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டதால், அவர் சாலை மறியல் செய்திருக்கிறார். பின்னர் அவர் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றிருப்பதை  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.