ஷின்சோ அபே படுகொலை: ஒரு நாள் துக்கம் அறிவித்தார் மோடி
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார்.
இதையும் படிக்க.. துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே உயிரிழந்தார்
Advertisement
Advertisement
இது குறித்து தகவல் அறிந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது.
ஷின்சோ அபே, உலகளாவிய தலைவராகவும் தன்னிகரற்ற தலைவராகவும், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தவர். ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேவின் படுகொலைக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் நாட்டில் ஜூலை 9ஆம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
அபேவை சுட்டது யார்?
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டவர் என்று அடையாளம் காணப்பட்ட நபரை ஜப்பான் காவல்துறை கைது செய்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்
நாரா என்ற நகரில் வசித்து வந்த டெட்சுயா யாமாகாமி என்ற 41 வயது நபரை ஜப்பான் காவல்துறை கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், அந்நாட்டு நேரப்படி, காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷிண்சோ அபே (67) சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது உயிரை காப்பாற்றுவதற்கான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
அவரது நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டதால், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே காலமானதாக அறிவிக்கப்பட்டது.
துரிதமாக செயல்பட்ட காவல்துறை, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தைக் கண்டறிந்து கைது செய்ததோடு, சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாரா நிஷி காவல்நிலையத்தில், குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அந்த நபர், காவல்துறையிடமிருந்து தப்பியோட முயலவில்லை என்றும் கூறப்படுகிறது.