FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இருக்கும்போதே வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்த குற்றவாளி

தில்லியில் பெண்ணைக் கொன்று 35 துண்டுகளாக்கி, குளிர்பதனப் பெட்டியில் உடல்பாகங்களை வைத்துக் கொண்டே, தனது வீட்டுக்கு பெண்களை குற்றவாளி அஃப்தாப் அழைத்து வந்திருப்பது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட

Updated On : 16 நவம்பர் 2022, 3:49 pm IST
ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இருக்கும்போதே வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்த குற்றவாளி
பகிர்:

புது தில்லி: தில்லியில் பெண்ணைக் கொன்று 35 துண்டுகளாக்கி, குளிர்பதனப் பெட்டியில் உடல்பாகங்களை வைத்துக் கொண்டே, தனது வீட்டுக்கு பெண்களை குற்றவாளி அஃப்தாப் அழைத்து வந்திருப்பது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஃப்தாப்பிடம் நடத்திய விசாரணையில், கொலை நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே ஷ்ரத்தாவுடன் கடுமையான சண்டை நடந்துள்ளது. அப்போதே, ஷ்ரத்தாவைக் கொலை செய்ய வேண்டும் என்று அஃப்தாப் முடிவு செய்துள்ளார். ஆனால், அப்போது ஷ்ரத்தா பயங்கரமாக சப்தம் போட்டதால், அவர் கொலை செய்யப்பட்டால் பலருக்கும் தெரிந்துவிடும் என்பதால் அஃப்தாப் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் சண்டை வந்த போது, சற்றும் யோசிக்காமல், ஷ்ரத்தாவை அஃப்தாப் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. பிறகு அவர் அமைதியாக இணையதளங்களில், உடலை எப்படி யாருக்கும் தெரியாமல் அழிப்பது என்பது குறித்து தேடியுள்ளார். மேலும், உடலை வீட்டுக்குள் வைத்திருக்கும் போது துர்நாற்றம் வீசாமல் தடுப்பது எப்படி என்றும் தேடியிருக்கிறார்.

இதையெல்லாம்விட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள், குளிர்பதனப் பெட்டி முழுவதும் நிரம்பி இருக்கும்போதே, மிகத் தைரியமாக அஃப்தாப், பல பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய டேட்டிங் ஆப்கள் தொடர்ந்து விசாரணையில் உள்ளன. 

காவல்துறை கைது செய்த அஃப்தாப், திங்கள்கிழமை, மற்ற குற்றவாளிகள் மூன்று பேர் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரவில் அளித்த நான்கு சப்பாத்திகளையும் சாப்பிட்டுவிட்டு, எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக உறங்கிவிட்டதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால், அவருடன் அடைக்கப்பட்டிருந்த மற்ற குற்றவாளிகள்தான் அச்சத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்ட 26 வயது ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த குற்றவாளி அஃப்தாப் சொன்ன தகவல்களின் அடிப்படையில், ஷ்ரத்தாவின் தலையை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

அதாவது, உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டியிருந்தாலும், ஷ்ரத்தாவின் தலையை,அஃப்தாப்-ஆல் வெட்டியிருக்க முடியாது என்று நம்பும் காவல்துறையினர், அவரது தலையை மீட்டால் மட்டுமே, குற்றவாளியின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள்.

சத்தர்பூர் வனப்பகுதிக்கு, குற்றவாளி அஃப்தாப்பை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர் எங்கெல்லாம் உடல் பாகங்களை வீசியதாகக் கூறினாரோ அங்கெல்லாம் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பல மணி நேரம் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் சில உடல் பாகங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அஃப்தாப், பயன்படுத்திய வேறு பல டேட்டிங் செயலிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள், அவருக்கு வேறு பெண்களுடனும் தொடர்பிருந்ததா என்ற கோணத்திலும், அவர்கள் யாரேனும் ஷ்ரத்தாவைக் கொலை செய்ய வலியுறுத்தினரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை செய்த பிறகு, அஃப்தாப், மருத்துவமனைக்குச் சென்று கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். கையில் 5 முதல் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன.

மேலும், கொலை நடந்த வீட்டில், துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக, போரிக் ஆசிட் பவுடர் மற்றும் சில ரசாயனங்களைப் பயன்படுத்தி வீட்டை சுத்தப்படுத்தியிருப்பதும் தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அஃப்தாப், அடிக்கடி தனக்கு ஷ்ரத்தாவின் நினைவு வரும் என்றும், அப்போதெல்லாம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஷ்ரத்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பல்வேறு இடங்களில் வீசிய அஃப்தாப், அவரது தலையை கடைசியாகத்தான் வீசியதாகவும், கடைசி வரை அவரது முகத்தை தினமும் பார்த்துக் கொண்டே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments