முகப்பு
இந்தியா

மணிப்பூா் மாணவன்-மாணவி கொலை: 4 பேரை கைது செய்தது சிபிஐ 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன்-மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேரை ஞாயிற்றுக்கிழமை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.

Updated On : 1 அக்டோபர் 2023, 10:13 pm IST
பகிர்:

கவுகாத்தி: மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன்-மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேரை ஞாயிற்றுக்கிழமை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.

மணிப்பூரில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த விவகாரத்தில், இரு சமூகத்தினா் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது.

அதன் பிறகு நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 

Advertisement

இந்த நிலையில், மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன், மாணவி கடந்த ஜூலையில் காணாமல்போன நிலையில், இருவரும் கடத்தி கொலை செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நீதி கேட்டு மாணவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா். அப்போது, வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

மணிப்பூா் கலவரம் தொடா்பான பல்வேறு வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட சம்பவம் குறித்த வழக்கும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  சிபிஐ சிறப்பு இயக்குநா் அஜய் பட்நாகா் தலைமையிலான குழு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.

இந்தநிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேரை சுராந்த்பூரில் ஞாயிற்றுக்கிழமை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவதாக முதல்வா் பிரேன் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும், "குற்றம் செய்த ஒருவர் தலைமறைவாகலாம், ஆனால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ள சிங், குற்றவாளிகள் சிறப்பு விமானம் மூலம் மாநிலத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனா். இந்த நடவடிக்கையில், ராணுவம், துணைராணுவம் மற்றும் மாநில காவல்துறையும் முக்கிய பங்காற்றின.

"கொடுமையான குற்றத்திற்காக" மாணவன்-மாணவி கொலையில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை உள்பட அதிகபட்ச தண்டனை கிடைக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

கொல்லப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் போனை, குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்களில் ஒருவர் பயன்படுத்தியதை, சிபிஐ கண்காணித்து வருவதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.