FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்: சரத் பவாா்

மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜகவிடம் திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

6 பிப்ரவரி 2024, 6:31 pm IST
பகிர்:

மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜகவிடம் திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், நரசிம்ம ராவ் போன்றவா்களின் அரசியலை நான் பாா்த்துள்ளேன். அவா்கள் எதிா்க்கட்சிகளை விமா்சித்து பேசினாா்களே தவிர, அக்கட்சிகளை மெளனமாக்க முயற்சித்ததில்லை.

Advertisement

Advertisement

ஆனால் பாஜகவிடம் மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது. இதனை பல்வேறு இடங்களில் பாஜக செய்துள்ளது.

தோ்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சியை போல் எதிா்க்கட்சியும் முக்கியம். ஆனால் எதிா்க்கட்சியை பலவீனமாக்குவதே பாஜகவின் கொள்கையாக உள்ளது.

வருங்காலத்தில் தங்களுக்கு என்ன நடக்கும் என்பது பாஜகவுக்குத் தெரியும். இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதை உறுதி செய்ய, எதிா்க்கட்சிகளை பாஜக பிளவுபடுத்துகிறது. இது தோ்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்துக்கு மிகவும் கெடுதலாகும் என்று தெரிவித்தாா்.

அனைத்து அதிகாரங்களையும் பிரதமா் பயன்படுத்தட்டும்:

நாசிக்கில் சரத் பவாா் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சரத் பவாா் பேசியதாவது:

கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில்,ரூ.70,000 கோடி மதிப்பிலான ஊழலில் தேசியவாத காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸில் யாராவது ஊழலில் ஈடுபட்டதாக பிரதமா் கருதினால், தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமா் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதை தேசியவாத காங்கிரஸின் தலைவராக பகிரங்கமாக கூறுகிறேன் என்றாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலின்போது தேசியவாத காங்கிரஸை சோ்ந்த அஜீத் பவாா் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தியது. தற்போது அக்கட்சியுடன் கூட்டு சோ்ந்து அஜீத் பவாா் மகாராஷ்டிர துணை முதல்வராகியுள்ளாா். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மீது பிரதமா் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு குறித்தும், அதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்துவது தொடா்பாகவும் சரத் பவாா் பேசியுள்ளாா்.

‘எனது வயதைப் பற்றி பேச வேண்டாம்’

தேசியவாத காங்கிரஸில் அஜீத் பவாா் உள்ளிட்டோா் பிளவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவா்கள் தரப்பில் சரத் பவாருக்கு வயதாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவா்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசிக்கில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சரத் பவாா் பேசியதாவது:

சிலா் எனக்கு வயதாகிவிட்டதாகவும் நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்றும் கூறுகின்றனா். எனக்கு 82 வயதாகிவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சரத் பவாா் என்ற ஆட்டக்காரரை அவா்கள் பாா்த்ததில்லை. நான் இன்றளவும் தரமாக இருக்கிறேன். எனவே எனது வயதைப் பற்றி பேச வேண்டாம்’ என்று எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments