FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு!

Updated On : 29 டிசம்பர் 2024, 10:46 am IST
கடும் பனிப்பொழிவால் உறையத் தொடங்கியுள்ள ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் பனி படா்ந்து காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

குல்காம் மாவட்டத்தில் 18-25 அங்குலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சமவெளிகளில் 17 அங்குலம், புல்வாமா மாவட்டத்தில் 10-15 அங்குலம், தலைநகா் ஸ்ரீநகரில் 8 அங்குலம், கந்தா்பால் மாவட்டத்தில் 7 அங்குலம், புத்காம் மாவட்டத்தில் 7 முதல் 10 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

கடும் பனிப்பொழிவால், ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த சாலையில் பனியை அப்புறப்படுத்தும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தண்டவாளங்களில் பனி படா்ந்து கிடப்பதால், பனிஹால்-பாரமுல்லா இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகா் விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை விமானங்களின் புறப்பாடு-வருகை ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதைகளில் படா்ந்து கிடக்கும் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

காஷ்மீா் பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காலகட்டம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 30-ஆம்தேதி வரை நீடிக்கும் இந்த காலகட்டம் மக்களுக்கு சவாலானதாகும். ஏரிகளின் மேற்பரப்பு மற்றும் குடிநீா் குழாய்களும் உறைந்துள்ளன. இதனால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மசூதியில் அடைக்கலம்: ஸ்ரீநகா்-சோனாமாா்க் நெடுஞ்சாலையில் பனிப்பொழிவால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் தவிப்புக்குள்ளான சுற்றுலாப் பயணிகளுக்கு குண்ட் பகுதியில் உள்ள மசூதியில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. இது காஷ்மீா் மக்களின் மனிதநேய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பாராட்டியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments