முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம் தகவல்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து....

Updated On : 29 டிசம்பர், 2024 at 11:29 AM
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானியர்கள் என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் பொருளாதாரச் சிக்கல்கள் தொடர்பான பிரச்னைகள் இருந்தபோதிலும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அவர்கள் தொடர்ந்து ஆதரிப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற பயங்கரவாதக் குழுக்களில் உள்ளூர்வாசிகளின் பங்களிப்பு இந்தாண்டு குறைந்துள்ளதாகவும், வெறும் 4 உள்ளூர்வாசிகள் மட்டுமே இந்தாண்டில் பயங்கரவாதக் குழுக்களில் இணைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ராணுவ அதிகாரிகள், “ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட என்கவுண்டர்களிலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலும் சுமார் 75 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானியர்களே.

உலகின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் முக்கியமாக இந்தியாவிற்கு தொடர்ந்து பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய மையமாக பாகிஸ்தான் கருதப்படுகிறது.

ஜம்மு பிராந்தியத்தில் கடந்த ஆண்டு முதல் பயங்கரவாதத்தை வலுப்படுத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட ஜம்மு பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையினர் இந்திய - சீன எல்லைக்கு அனுப்பப்பட்டதும் உருவான வெற்றிடத்தை நிரப்ப மேலும் அதிகமாக ராணுவப் படையினர் ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

ராணுவ தளபதி உபேந்திர திவேதி மற்றும் வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுசேந்திர குமார் ஆகியோர் ராணுவத்தின் 'ஒயிட் நைட் கார்ப்ஸால்’ பராமரிக்கப்படும் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளை ஒழிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →