FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழக மக்களிடம் மன்னிப்புக் கோரி மத்திய இணை அமைச்சர் மனு

பெங்களூரு குண்டுவெடிப்பு குறித்து பேசியதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கோரி அமைச்சர் சோபா கடிதம்

Updated On : 3 செப்டம்பர் 2024, 5:57 pm IST
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெங்களூரு ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகம்
பகிர்:

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த சம்பவம் தொடர்பான தனது கருத்துக்கு, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் சோபா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு மன்னிப்பு கோருவதாகவும், மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறும் மத்திய அமைச்சர் சோபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது, திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சோபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய இணை அமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பெங்களூருவில் உள்ள உணவகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருந்த நிலையில், கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சோபா, தமிழகத்திலிருந்து வந்து, கர்நாடகத்தில் இருக்கும் உணவகத்தில் வெடிகுண்டுகளை வைத்து, வெடிக்கச் செய்கிறார்கள். கர்நாடக மாநிலத்தின் அமைதியை குலைக்கிறார்கள். அவர்கள் மீது கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இது தொடர்பாக சோபா, எக்ஸ் வலைதளத்தில், என் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வார்த்தைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்துகள் சிலருக்கு வலியை ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன், அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன், இதனால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், எனது கருத்துகளைத் திரும்பப் பெறுகிறேன் என்று மன்னிப்புக் கேட்டிருந்தார்.

பின்னணி என்ன?

பெங்களூருவில் உள்ள ராமேசுவரம் கபே உணவகத்தில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில், உணவகத்தில் இருந்த ஊழியா்கள் உள்பட 10 போ் படுகாயமடைந்தனா். இந்த வழக்கை பெங்களூரு காவல் துறையினா் விசாரித்து வந்த நிலையில், வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி குண்டுவெடிப்பில் முக்கிய நபராக செயல்பட்ட கா்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம் தீா்த்தஹள்ளியைச் சோ்ந்த முஸாஹிா் ஹுசைன் ஷாகிப், அப்துல் மத்தீன் தாஹா ஆகியோரைக் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து சென்னை, ஷிவமொக்கா, பெங்களூரு ஆகிய நகரங்களில் சோதனைமேற்கொண்டனா். இந்த நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக, என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள 2 மருத்துவா்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments