FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

2025 தொடக்கம் முதலே ஐ-போன் விற்பனை நாட்டில் அதிகரித்துள்ளது பற்றி...

Updated On : 16 ஏப்ரல் 2025, 5:09 pm IST
ஆப்பிள் - AP
பகிர்:

முதல் காலாண்டில் நாட்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனை இதுவாகும்.

மக்கள்தொகையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மின்னணுப் பொருள்கள் விற்பனையின் மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக சாம்சங், ஆப்பிள் போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனம் எந்தவொரு காலாண்டிலும் பதிவாகாத விற்பனையை இந்தியாவில் கண்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் மட்டும் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Advertisement

Advertisement

உற்பத்திக்கு உதவும் இரு நிறுவனங்கள்

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அனைத்து நாடுகளுக்கும் 10% வரியைக் கட்டாயமாக்கியுள்ளார். சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தி தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார். இதில் சீனாவுக்கு 145% வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதனால் விலை உயரும் அபாயம் நேரிடும் என்பதைக் கணக்கிட்ட ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான உதிரி பாகங்களை அசெம்பிள் செய்ய முடிவு செய்துள்ளது.

அதோடு மட்டுமின்றி ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஐ-போன்களை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையிலும் இறங்கிவிட்டது. சீனாவிலிருந்து 3 விமானங்களிலும், இந்தியாவில் இருந்து 5 விமானங்களிலும் ஐ-போன்களை கொண்டு சென்று அமெரிக்காவில் இறக்குமதி செய்துகொண்டது.

உலகம் முழுவதுமுள்ள ஐ-போன்களில் 20% இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலுள்ள ஃபாக்ஸ்கான்,விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இதற்கு உதவியாகச் செயல்படுகின்றன. இந்த இரு நிறுவனங்களிலும் ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

பட்ஜெட் போன்களின் நிலைமை

இந்தியாவில் பட்ஜெட் போன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையே அதிகம் வாங்கிவந்தனர். எனினும் தற்போது பயனர்களின் மனநிலை மாறத் தொடங்கியுள்ளது. பலரும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்திய நகரங்களில் வசிக்கும் மக்கள் ஆப்பிள், சாம்சங் போன்ற பிராண்டுகளை பயன்படுத்துவதை அதிகம் விரும்புகின்றனர். இதனால் இந்திய சந்தையில் ஐ-போன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கத்தொடங்கியுள்ளது.

இது குறித்து சர்வதேச தரவுக் கழகத்தின் ஆராய்ச்சி மேலாளர் உபாசனா ஜோஷி தெரிவித்துள்ளதாவது,

''ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. 2025-ன் முதல் காலாண்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாதத் தவணை (இஎம்ஐ) விலக்கு, கேஷ் பேக், ஆன்லைன் சிறப்புத் தள்ளுபடி போன்றவை ஐ-போன்கள் விற்பனை இரட்டிப்பாக முக்கிய காரணங்களாகவுள்ளன. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐ-போன் 16-ஐ அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வாங்க வைக்கும் நோக்கத்தில் பல சிறப்புத் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டன'' எனக் குறிப்பிட்டார்.

ஐ-போன் 16க்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஐ-போன் 16இ (iPhone 16e) அறிமுகப்படுத்தப்பட்டது. ஐ-போன்களின் புரோ மாடல்களை ஒப்பிடும்போது, 16இ மாடல், மலிவு விலையிலேயே சந்தையில் கிடைக்கிறது.

புரோ மாடல்களை விட விலைக் குறைவு என்பதாலும், ஆப்பிள் நிறுவனத்தின் தனித்துவம் இருப்பதாலும் ஐ-போன் 16இ மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்தது. இந்தியா போன்ற சந்தையில் விலை முக்கிய காரணியாக இருப்பதால், ஐ-போன் 16இயின் நிர்ணய விலையே ஆப்பிள் விற்பனை இந்த காலாண்டில் அதிகரிக்க காரணமாகியது.

விலைப் பட்டியல்

ஐ-போன் 16

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் ரூ. 74,900-க்கு கிடைக்கிறது.

அமேசானில் ரூ. 56,790-க்கு கிடைக்கிறது.

ஐ-போன் 16இ

ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ. 59,900-க்கு கிடைக்கிறது.

அமேசான் தளத்தில் ரூ. 56,790-க்கு கிடைக்கிறது.

இதையும் படிக்க | டிரெண்ட் ஆகும் டோலோ 650 மாத்திரை! என்ன ஆனது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments