இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்கள் விலை உயர்வு! பிற நாடுகளைவிட 20% அதிகம் ஏன்?
இந்தியாவில் அதிக விலைக்கு ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்வது பற்றி...
இந்தியாவில் பழைய மாடல் ஐபோன் சீரிஸ் விலையை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், ஐபோன் 18 சீரிஸ் மற்றும் ஐபோன் டியோ ஆகிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இதனிடையே, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பழைய மாடல் ஐபோன் சீரிஸ்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
ரூ. 82,900-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 17 சீரிஸின் விலை ரூ. 99,000 ஆகவும், ரூ. 1,19,900-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் ஏர் மாடல் விலை ரூ. 1,49,000 ஆகவும், ரூ. 79,900-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 16 விலை ரூ. 89,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து பழைய மாடல் ஐபோன் விலைகளும் முன்பைவிட 20 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூடுதல் விலை ஏன்?
பொதுவாகவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், வாட்ச்கள், ஏர்பாட்ஸ்களின் விலை பிற நாடுகளைவிட இந்தியாவில் கூடுதல் விலைக்குதான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
உதாரணமாக நேற்று வெளியிடப்பட்ட ஐபோன் டியோ மாடலின் விலை இந்திய மதிப்பின்படி, அமெரிக்காவில் ரூ. 1,67,900-க்கும், துபையில் ரூ. 1,97,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ரூ. 2,99,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 முதல் 22% வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு மத்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரி மற்றும் சுங்கக் கட்டணம் போன்றவையே காரணம்.
ஆப்பிள் நிறுவனம் சில அடிப்படை மாடல்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்தால், அதன் ப்ரோ, மேக்ஸ் சீரிஸ்கள் வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் அசெம்பிள் செய்யும் மாடல்களின் உதிரி பாகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த பாகங்களுக்கும் வரி விதிக்கப்படுவதால் அடிப்படை மாடல்களின் விலைகளிலும் பெரியளவில் மாற்றமில்லை.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ப்ரீமியம் வகை போன்களுக்கு 22% சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி செஸ் வரி, 18% ஜிஎஸ்டி வரி போன்றவை விதிக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் துபையை ஒப்பிடுகையில் இந்த வரி மிகவும் அதிகமாகும். உதாரணமாக துபையில் 5% மட்டுமே செஸ் விரி விதிக்கப்படுகின்றன. இறக்குமதி வரி கிடையாது.
இதுமட்டுமின்றி, ஐபோன்களின் விலை அமெரிக்க டாலரை மையமாகக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகையால் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரியும்போது, ஆப்பிள் நிறுவனம் தனது லாப விதிதத்தை தக்க வைத்துக் கொள்ள கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
Apple raises prices of older iPhone models in India! Why is it 20% higher than in other countries?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.