ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!
ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது பற்றி...
ஹிமாசல் பிரதேசத்தில் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலில், சம்பா மாவட்டத்தில் அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் சம்பா மாவட்டத்தில் அதிகாலை 4.39 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவாகியுள்ளது.
Advertisement
இந்த நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால், பீதியில் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர்.
ஏற்கெனவே, ஹிமாசலில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக குலு மாவட்டத்தில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு, ஹிமாசல் பிரதேச மாநிலத்தில் மட்டும் இயற்கை பேரிடர்களால் 276 பேர் பலியாகியிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.