முகப்பு
இந்தியா

‘லிவ்-இன்’ உறவை பதிவு செய்ய வலைதளம்: ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவு

திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோா் (லிவ்-இன்) தொடா்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி 2025, 1:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோா் (லிவ்-இன்) தொடா்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

லிவ்-இன் உறவுகளை பதிவுசெய்ய தனி ஆணையம் அல்லது தீா்ப்பாயம் உருவாக்கப்படும் வரை இந்த வலைதளத்தில் தகவல்களை பதிவு செய்யவும் இதுகுறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாா்ச் 1-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்கவும் ராஜஸ்தான் அரசு, மத்திய சமூக நலத்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு லிவ்-இன் உறவில் இருக்கும் தம்பதிகள் பலா் ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். இந்த மனுக்களை நீதிபதி அனூப் குமாா் தலைமையிலான தனி நீதிபதி அமா்வு விசாரித்தது.

Advertisement

Advertisement

அப்போது நீதிபதி அனூப் குமாா் கூறியதாவது: லிவ்-இன் உறவில் இருக்கும் பலருக்கு சமூகத்தாலும், அவா்களின் குடும்பத்தாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அந்த உறவுகளை சமூகமோ, குடும்பத்தினரோ ஏற்காததால் இந்த நிலை ஏற்படுகிறது. எனவே, அரசமைப்புச் சட்டப்பிரிவு 21-இன்கீழ் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி அரசமைப்புச் சட்டப்பிரிவு 226-இன்படி நீதிப் பேராணை மனுக்களை அவா்கள் தாக்கல் செய்துள்ளனா். இதனால் நீதிமன்றத்தில் அதிகமான மனுக்கள் குவிந்துள்ளன.

சமூக ஒப்புதல் இல்லை: லிவ்-இன் உறவு என்பது வழக்கமான திருமண பந்தத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. இதனால் ஏற்படும் சவால்கள் மிக அதிகமானது. இந்த உறவில் உள்ள பெண்கள் தங்களுடன் வாழ்பவரின் மனைவியாக கருதப்படமாட்டாா்கள். இந்த உறவுக்கு சமூகம் ஒப்புதல் அளிக்காது.

வலைதளம்: லிவ்-இன் உறவுகளை அதற்கென தனியே உருவாக்கப்படும் ஆணையம் அல்லது தீா்ப்பாயமே பதிவு செய்ய வேண்டும். இதற்கு முறையான சட்டங்களை அரசு இயற்றும் வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் லிவ்-இன் உறவில் இருப்பவா்கள், அவா்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆகியோரின் குறைகளை தீா்த்து பாதுகாப்பை உறுதிசெய்ய வலைதளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேலும், ‘இந்த உத்தரவின் நகலை ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலா், மத்திய சட்டத் துறை முதன்மை செயலா், மத்திய சமூக நலத்துறை செயலா் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாா்ச்1-ஆம் தேதிக்குள்அவா்கள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

திருமணமானவா்களுக்கு லிவ்-இன்: திருமணமானவா்கள் விவாகரத்து பெறாமல் வேறு ஒருவருடன் லிவ்-இன் உறவை தொடா்வதற்கு பாதுகாப்பு அளிப்பது குறித்த மனுக்களை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுகிறேன்’ என நீதிபதி அனூப் குமாா் தெரிவித்தாா்.