புலன் விசாரணை அதிகாரிகளுக்கு பிடிஆணை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
குற்ற வழக்குகளில் சாட்சி அளிக்க ஆஜராகாத புலன்விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக பிடிஆணை பிறப்பிக்க வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்ற வழக்குகளில் சாட்சி அளிக்க ஆஜராகாத புலன்விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக பிடிஆணை பிறப்பிக்க வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காட்டைச் சோ்ந்த ராஜ்கமல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்னையும் தனது குடும்பத்தாரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கட்டப் பஞ்சாயத்துதாரா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனுதாரா் புகாரை பரிசீலித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி ராஜ்கமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். அப்போது, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னா், அந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைக்கு உதவாமல் இருப்பதால் வழக்குகளின் விசாரணை தாமதமாகிறது. எனவே, வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றங்களில் ஆஜராகாத புலன் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக பிடிஆணை பிறப்பிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும், இந்த உத்தரவுக்கு தொடா்பு இல்லை. முடித்துவைக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எந்த கோரிக்கையும் எழுப்பாத நிலையில், தனிநீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு தடை விதித்து, உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.