தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி 34 ஆக உயர்வு!
தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் திங்கள்கிழமை உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஆலையில் 90-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தவலறிந்ததும் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தொடங்கினர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனர்.
Advertisement
இதில், 2 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்த 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செவ்வாய்க்கிழமை காலை பார்வையிடுவார் என்று சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மா தெரிவித்துள்ளார்.
The death toll in a blast at a pharmaceutical factory in Sangareddy district of Telangana state on Monday has risen to 34.