FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

Updated On : 19 ஜூன் 2025, 6:35 am IST
பகிர்:

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை வெளியிட்டாா். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் குறைந்த சுங்கச்சாவடி கட்டணத்தில் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள வசதியாக வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ரூ.3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இந்த பாஸ் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை ஆண்டு முழுவதும் அதிபட்சம் 200 முறை கடந்து செல்ல முடியும்.

இந்த வருடாந்திர பாஸ் திட்டம் சரக்கு வாகனங்கள் அல்லாத காா், ஜீப் மற்றும் வேன்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களுக்கு மட்டுமானதாகும்.

இந்த பாஸ் திட்டத்தைப் பயன்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கான வசதிகள் ‘ராஜ்மாா்க் யாத்ரா’ செயலி மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ), மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை (எம்ஓஆா்டிஹெச்) வலைதளங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

வாகன ஓட்டிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் ‘ஃபாஸ்டேக்’ திட்டத்தில், இந்த வருடாந்திர பாஸ் நடைமுறையை செயல்படுத்திக்கொள்ள முடியும். இந்த பாஸ் திட்டம் தேசிய நெஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே செல்லபடியாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ் செல்லாது. இந்த சுங்கச்சாவடிகளில் வழக்கமான முறையில் ‘ஃபாஸ்டேக்’-இல் இருந்து கட்டணம் கழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

யாருக்கு பலன்? குறிப்பிட்ட சுங்கச்சாவடியை அடிக்கடி கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வருடாந்தி பாஸ் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு சுங்கச்சாவடியை அடிக்கடி கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மாதம் ரூ. 340 கட்டணம் செலுத்த வேண்டும். அதன் படி, ஆண்டுக்கு இவா்கள் ரூ. 4,080 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இவா்கள் தற்போது ரூ. 3,000 செலுத்தி வருடாந்திர பாஸ் பெற்றால், சுங்கச்சாவடியை 200 முறை கடந்து பயணிக்க முடியும். இத் திட்டத்தின் கீழ் ஒரு சுங்கச்சாவடியை ஒரு முறை கடப்பது ஒரு பயணமாக கணக்கில் கொள்ளப்படும். அவ்வாறு 200 முறை வரம்பைக் கடந்ததும், அதே ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ரூ. 3,000 செலுத்தி பாஸை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments