ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!
ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது...
ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர்.
உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று, ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை பிடிப்பதற்கான பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் மற்றும் மாநில காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளில், பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவிகளுடன் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தேடப்பட்ட ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 4 பேர் கரோர் நல்லாஹ் பகுதியில் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தவுடன், இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான பயங்கரவாதி, ஹைதர் (எ) ஜப்பார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!