ஏப்.4-ல் கேரளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!
கேரளத்தில் வரும் ஏப். 4 அன்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்வது குறித்து...
கேரளத்தில், வரும் ஏப். 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப். 9 அன்று சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனால், பல்வேறு கட்சியினரும் மக்களிடையே வாக்குச் சேகரிக்கும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் ஏப். 4 அன்று கோட்டயம் மாவட்டத்தின் சங்கனாச்சேரியில் உள்ள என்.எஸ்.எஸ். கல்லூரி திடலில் நடைபெறும் பிராசரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து சாலை வழியாக பதனம்திட்டாவின் திருவல்லா பகுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மைதானத்தில் மக்களிடையே பிரசாரம் மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில், கேரள பாஜக தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கில்லிப்பாலம் சந்திப்பிலிருந்து கரமனை வரை சுமார் 1.5 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் செல்லவுள்ளார். பின்னர், அன்று மாலை அவர் மீண்டும் தில்லிக்குத் திரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், கேரளத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் பிரசார நிகழ்ச்சிகளில் அம்மாநில பாஜகவின் மூத்த தலைவர்கள் ராஜீவ் சந்திரசேகர், முரளிதரன் மற்றும் தே.ஜ.கூ. வேட்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக, கேரளத்தில் நடைபெறும் தேர்தலில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையில் மும்முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.