ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்புகள் தீவிரம்!
ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலியானது குறித்து...
ராஜஸ்தானில், கடந்த 5 நாள்களில் மர்ம காய்ச்சலின் பாதிப்பால் 5 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
சலம்பர் மாவட்டத்தின் லால்புரா மற்றும் காட்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 2 முதல் 4 வயதுடைய 5 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகிய பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அறிகுறிகள் தென்பட்ட 24 மணிநேரங்களில் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி உள்பட 5 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் திடீர் மரணங்களுக்கான காரணம் குறித்து தெரியாததால், மருத்துவக் குழுக்கள் களமிறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 2 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 560 குடும்பங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மர்ம காயச்சலுக்கான அறிகுறிகளுடன் மேலும் 8 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காய்ச்சலுக்கான காரணம் குறித்து ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள கால்நடைத் தொழுவங்களில், அதிகாரிகள் கிருமி நாசினிகள் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.