அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தத்துக்கு இந்தியா வரவேற்பு
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தத்தை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே சுமார் 6 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்குமிடையே இரண்டு வாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், "போர் நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.
Advertisement
நாம் முன்னரே வலியுறுத்தியபடி, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர பதற்றத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம்.
இந்த மோதலால், மக்களுக்கு ஏற்கெனவே பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி வழங்கல் மற்றும் வர்த்தக விநியோகத்தையும் சீர்குலைத்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் வணிகம் மற்றும் உலகளாவிய வர்த்தகமும் மேலோங்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா விதித்துள்ள 48 மணிநேர கெடுவுக்குள் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால், புதன்கிழமை காலையில் ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமும் அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தது, உலக நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், திடீரென போர் நிறுத்த ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்தார்.