FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டில் மட்டும் இதுவரை 24 புலிகள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஏப்ரல் 2026, 4:03 pm IST
மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த புலி.
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டில் மட்டும் இதுவரை 24 புலிகள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள சார்கான் கிராமத்தின் கிணற்றில் நேற்று (ஏப்ரல் 26) 5 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று இறந்து கிடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 12 கி.மீ. சுற்றளவு பெஞ்ச் புலிகள் காப்பகத்தின் கீழ் வருகிறது.

மத்தியப் பிரதேச அரசின் வனத்துறை தலைமையக மூத்த வனவிலங்குப் பிரிவு அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், புலி மின்சாரம் முதலில் தாக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் அதனுடைய சடலம் கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

புலியின் உடலில் எந்தச் சேதமும் ஏற்படாமல் மின்சாரம் தாக்கியதற்கான காயங்கள் மட்டுமே இருப்பதால், ஒருவேளை விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி நுழைவதைத் தடுக்கப் போடப்பட்ட மின் வேலியில் மோதி புலி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. மேலும், அதை விபத்து போல காட்டுவதற்காக அதனை மர்ம நபர்கள் கிணற்றில் வீசியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

புலிகளுக்கிடையே ஏற்படும் பிராந்திய சண்டைகளால் அவ்வப்போது இறப்புகள் ஏற்படும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி புலிகள் உயிரிழப்பது இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது.

பெஞ்ச் புலிகள் காப்பகத்தில் அதிகரித்து வரும் புலிகளின் எண்ணிக்கை காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் புதிய வாழ்விடத்தைத் தேடி வழிதவறி வந்தபோது இந்தப் புலி உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் புலியுடன் சேர்த்து இந்தாண்டில் இதுவரை 24 புலிகள் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் உயிரிழந்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், கன்னா புலிகள் காப்பகத்தில் பட்டினியால் ஒரு பெண் புலி 3 நாட்களுக்குள் தனது இரு குட்டிகளை இழந்ததாகச் செய்தி வெளியானது. மேலும், பன்னா புலிகள் காப்பகம் மற்றும் பாலகாட் மாவட்டத்தில் தனித்தனியே தலா ஒரு புலி இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் பதிவான 24 புலிகளின் இறப்புகள், கடந்த 4 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட புலிகளின் உயிரிழப்பை விட மிக அதிகமாகும்.

கடந்த 2023-ல் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில் 16 புலிகள் உயிரிழந்தன. இது 2024-ல் 17, 2025-ல் 19 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் 2025-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 56 புலிகள் உயிரிழந்தன. இது 1973-ல் புலிகள் காப்பகத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பதிவான அதிக எண்ணிக்கையாகும்.

மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகள் இருப்பதாக 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். இதனால், மத்தியப் பிரதேசம் ’புலிகளின் மாநிலம்’ எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் புலிகளின் உயிரிழப்புகள் மற்றும் அதன் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments