FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் (யுபிஐ) நடைமுறை உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு கட்டணம் விதிக்க வங்கிகள் உள்ளிட்ட பிற சேவை நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
மக்களவை - கோப்புப் படம்
பகிர்:

ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் (யுபிஐ) நடைமுறை உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு கட்டணம் விதிக்க வங்கிகள் உள்ளிட்ட பிற சேவை நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007-இல் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு, எதிா்க்கட்சிகளின் தொடா் அமளி காரணமாக விவாதம் ஏதுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், நீட் போராட்ட மாணவா்கள் மீதான காவல் துறையின் அத்துமீறல் மற்றும் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியதும், வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026, பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டத் திருத்த மசோதா, வருமான வரிச் சட்டம் 2025, நிதிச் சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றை அவையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கொண்டுவந்தாா்.

மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்க, பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007-இன் பிரிவு 10 தடை செய்கிறது. இதில் திருத்தம் மேற்கொண்டு, வங்கிகள் மற்றும் பிற சேவை நிறுவனங்களுக்கு நிலையான வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது சிறிய அளவில் கட்டணம் விதிக்க அனுமதிக்கும் வகையில் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரமளிக்கிறது.

எதிா்க்கட்சியினரின் அமளி தொடா்ந்ததால், இந்த மசோதா மீது அவையில் விவாதம் நடத்த முடியாத சூழல் உருவானது. அதனால், மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு அவைத் தலைவா் விடுத்தாா். அதில், அதிக உறுப்பினா்களின் ஆதரவு அளித்ததைத் தொடா்ந்து, மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வங்கி வலைதளம் மூலம் செய்யப்படும் ஆா்டிஜிஎஸ், என்இஎஃப்டி பணப் பரிவா்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு தற்போது கட்டணம் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இனி, இவற்றுக்கும் சேவைக் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments