மக்களின் மனநிலையை அறிய புதிய பிரசாரம்! அடுத்த மாதம் களமிறங்கும் சிஜேபி!
க்யா போல்தி பப்ளிக் என்ற பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக சிஜேபி அறிவித்துள்ளது பற்றி..
இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன் கலந்துரையாடவும், அவர்களின் பிரச்னைகளைத் தெரிந்துகொள்ளவும் "க்யா போல்தி பப்ளிக்" (மக்கள் என்ன சொல்கிறார்கள்?) என்ற பிரசாரத்தைக் கரப்பான் ஜனதாக் கட்சியினர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள தனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற்ற சிஜேபியின் முக்கியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். புதன்கிழமை முதல் திப்கேவின் இல்லத்தில் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்தப் பிரசாரத்தின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பதையும் நாங்கள் அறிந்துகொள்வோம் என்று அவர் கூறினார்.
Advertisement
Advertisement
மாணவர் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா அமைந்தது. கடந்த 10-12 ஆண்டுகளில் மக்களின் மனதில் உருவாக்கிய பயம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
மக்கள் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள். இன்று அவர்கள் ஒருவரின் ராஜிநாமாவைக் கோரியுள்ளனர். நாளை மற்றவர்களின் ராஜிநாமாவைக் கோருவார்கள் என்று அவர் கூறினார்.
பாபாசாகேப் அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் நேரு ஆகியோரின் வளர்ந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் சிஜேபி செயல்படும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளே எங்கள் கொள்கைகள் ஆகும். செய்தியாளர் சந்திப்பில் சிஜேபியின் தலைமைப் பேச்சாளர் சௌரவ் தாஸ், பேச்சாளர் அசுதோஷ் ரன்கா மற்றும் பிற பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பிற தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் கடந்த மாதம் புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள், மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதற்கு வழிவகுத்தன.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமல்லாமல், வேலையில்லாத இளைஞர்களும் பங்கேற்றனர்.
வேலையின்மை ஒரு பெரிய பிரச்னை; இதை நாங்கள் நாடு தழுவிய பிரச்னையாக முன்னெடுப்போம்.
கல்விச் சீர்திருத்தங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். பள்ளிப் பருவம் முதலே கல்வி என்பது சாமானியர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது. கல்வி லாபம் ஈட்டும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், அந்த நிலையை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் 35 வயதுக்குள்பட்டவர்கள் என்றும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்களிலும் அத்தகையவர்களே இடம்பெற்றிருந்தனர் என்றும் அபிஜீத் திப்கே குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.