ஜார்க்கண்ட் போராட்டம் பற்றிப் பேசாமல் இரட்டை வேடம் போடும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்!
ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் அரசு தேர்வுகளில் பணி நியமனம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களும் போராடி வருகின்றனர்.
இன்று சட்டப்பேரவையை நோக்கி மாணவர்கள் அமைதிப் பேரணி சென்ற நிலையில் போலீஸார் அவர்களைத் தடுத்தனர்.
Advertisement
Advertisement
இப்பிரச்சினைக்காக ஜே.எல்.கே.எம். தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ 9 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் எடையில் 10.5 கிலோ குறைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் இந்தப் பேரணியில் பங்கேற்றார். பேரணியில் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உருவப்படத்தை அவர் கையில் ஏந்தியிருந்தார்.
இந்த போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியப் பொதுச் செயலாளர் தருண் சுக், ”தில்லியில் மாணவர்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாகத் தங்கள் வசப்படுத்த முயன்று, பேருந்துகளில் அமர்ந்தும் பாதயாத்திரை நடத்தியும் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இப்போது எங்கே போனார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஜார்க்கண்டில் உங்கள் கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், ராகுல் காந்திக்கு மாணவர்களின் குறைகளைக் கேட்கக் கூட இப்போது நேரமில்லை. இது இரட்டை வேடம். தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள், இந்தப் போராட்டம் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஜார்க்கண்ட் சென்று போராட்டம் நடத்தி, அங்கு சில வார்த்தைகளைப் பேசுவதற்கு ஏற்ற பேருந்துகள் எதுவும் அவர்களிடம் இப்போது இல்லை.
மாணவர்களின் கருத்துகளைக் கேட்டுப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். போராடுவது நமது உரிமை, சத்தியாகிரகம் நமது வலிமை. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
BJP condemns Rahul Gandhi for playing a double game by remaining silent on the Jharkhand agitation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.