ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முற்றுகை! மாணவர்கள் பேரணியைத் தடுத்த போலீஸ்!
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீஸ் தடுத்தது பற்றி...
ஜார்க்கண்ட்டில் தேர்வு முறைகேட்டை கண்டித்து, அம்மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினர்.
ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக, சிஐடி விசாரணை நடத்தப்பட்டது.
சிஐடி விசாரணையின் முடிவிலும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு தகவலும் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து உரிய முறையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் 3 உறுப்பினர்களும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனர்.
எனினும், சிஜிஎல் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் சிபிஐ விசாரணை ஆகிய கோரிக்கைகளை மாநில அரசு ஏற்காததால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை முற்றுகையிடும் வகையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் திங்கள்கிழமை பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் கடந்த 9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர நாத் மஹதோவும் பங்கேற்றார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் தடுப்புகளை மாணவர்கள் தகர்க்க முயன்றதால், காவல்துறை - மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
Jharkhand Assembly Gherao! Police Block Students' Rally!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.