ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணியில் ஈடுபட்டவர்களில் 110 பேர் கைது செய்யப்பட்டது குறித்து...
ஜார்க்கண்ட்டில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணி சென்றனர். சட்டப்பேரவையை முற்றுகையிடச் சென்ற 110 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் சார்பில் 103 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூலை 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் புகார் எழுப்பினர்.
இது குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவிலும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு தகவலும் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து உரிய முறையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இதனைக் கண்டித்து பாஜக மாநில அளவிலான கடையடைப்பு போரட்டத்தை அறிவித்திருந்தது. இதேபோன்று ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணி அறிவித்திருந்தனர்.
இதன்படி ராஞ்சியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து புதிய நாடாளுமன்றம் நோக்கி ஏபிவிபி அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது.
காவல் துறையினர் பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தனியாக அருகில் இருந்த கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
பேரணியில் ஈடுபட்டவர்களை தாக்குவதற்காக மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஏவல் படையாக காவல் துறையினர் செயல்படுவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
Jharkhand protests 110 ABVP members detained after clash with police
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.