டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் எதிர்ப்பு! ராஜிநாமா குறித்து சந்திரசேகரன் அறிக்கை!
டாடா சன்ஸ் குழுமத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து சந்திரசேகரன் அறிக்கை...
டாடா சன்ஸ் தலைவராக தனது பதவி நீட்டிப்புக்கு நிர்வாகக் குழுவில் எதிர்ப்பு எழுந்ததால் ராஜிநாமா முடிவை எடுத்துள்ளதாக அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டாடா குழுமத் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற சந்திரசேகரனின் பதவிக்காலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது.
இதனிடையே, அவரின் பதவி நீட்டிப்புக்கு டாடா அறக்கட்டளை தலைவரும் ரத்தன் டாடாவின் சகோதரருமான நோயல் டாடா உள்ளிட்ட சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக சந்திரசேகரன் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
“டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகாலப் பணிவாழ்வை நிறைவு செய்துள்ளேன். மிகவும் மதிப்பிற்குரிய இந்த நிறுவனத்திற்குப் பங்களிக்கும் வகையில் மிகுந்த மனநிறைவு தரும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகவும், ஒரு முக்கியப் பொறுப்பாகவும் இருந்தது.
டாடா சன்ஸ் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20 அன்று முடிவடைகிறது. எனது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க 'சர் டொராப்ஜி டாடா அறக்கட்டளை' மற்றும் 'சர் ரத்தன் டாடா அறக்கட்டளை' ஆகியவை ஒருமனதாகத் தீர்மானித்து பரிந்துரைத்தன. இதனை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரைக்கு எடுத்துக் கொண்டது.
2026 பிப்ரவரி 24 அன்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால், நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் இதற்கு ஆதரவு தெரிவிக்காததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஒருமனதாக தேர்வு செய்யப்படாத நிலையில், முடிவெடுக்காமல் ஒத்திவைக்க தீர்மானித்தேன்.
அந்த நிர்வாகக் கூட்டம் நடைபெற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் ஒரு மிகப்பெரிய நிறுவனம். பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் காலகட்டத்தில் உள்ளன. 2027 பிப்ரவரிக்குப் பிறகும் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியமானது. ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவு இருப்பது மிக முக்கியமாகும்.
இத்தகைய சூழலில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, மீண்டும் அப்பதவிக்கு நான் போட்டியிடவோ அல்லது அப்பதவியை ஏற்கவோ விரும்பவில்லை என்பதை இன்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவிடம் தெரிவித்துள்ளேன். சுமூகமான தலைமை மாற்றத்தை உறுதிசெய்யும் வகையில், அடுத்தகட்டத் தலைமைத்துவம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு நிர்வாகக் குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Dissent within the Tata Sons board - Chandrasekaran issues statement regarding the resignation!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.