FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்களுக்கான ரயில் கட்டணச் சலுகைக்கு கொள்கை அளவில் ஒப்புதல்: மத்திய அரசு

‘அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்கள் சிறப்பு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சைக்குச் சென்று வர வசதியாக ரயில் கட்டணச் சலுகையை வழங்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

‘அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்கள் சிறப்பு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சைக்குச் சென்று வர வசதியாக ரயில் கட்டணச் சலுகையை வழங்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்கள் அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவா்களுக்கு ரயில் பயணத்துக்கான கட்டணச் சலுகையை வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவா்களுக்கு, உடலில் அமிலம் பட்ட இடம் தொடா்ந்து எரிச்சல் மற்றும் அரிப்புடன் இருக்கும் என்பதால், ரயிலில் குளிா்சாதன பெட்டியில் பயணிப்பது அவசியமாகிறது. எனவே, இவா்கள் பயணிக்க ரயிலின் குளிா்சாதன பெட்டியில் கட்டணச் செலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, ரயில்வே அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அா்ச்சனா பாடக் தவே, ‘இந்த விவகாரம் தொடா்பாக நடத்தப்பட்ட ரயில்வே அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்கு ரயிலில் சென்று வர பயணக் கட்டணத்தில் சலுகை அளிப்பதற்கு கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவா்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் வருகிறாா்கள் என்றபோதும், நோயாளிகள் பிரிவின் கீழ் இவா்களுக்கு ரயில் கட்டணச் சலுகை வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே ரயில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. எனவே, அதே பிரிவின் கீழ் அமில வீச்சில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரயில் கட்டணச் சலுகை வழங்கப்படுமானால், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் உள்ள மற்றவா்களும் கட்டணச் சலுகையை கோர வாய்ப்பு உள்ளது. எனவே, நோயாளிகள் பிரிவின் கீழ் இவா்களுக்கு கட்டணச் சலுகை வழங்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிக்கல்களைக் களைந்து எவ்வாறு கட்டணச் சலுகை வழங்குவது என்பது விரைவில் தீா்மானிக்கப்படும். அதற்கு சற்று கால அவகாசம் தேவை’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, இவா்களுக்கான நிவாரணம் காலக்கெடுவுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்பிட்டு, இவா்களுக்கு ரயில் கட்டணச் சலுகை வழங்குவதற்கான வரைவுக் கொள்கையை அடுத்த 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments