19.9.1976 - நகர்ப்புற நிலவரி - அறநிலையங்களுக்கு முழு விலக்கு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, செப். 18 - மத சம்பந்தமான நிலையங்கள், கல்வி மற்றும் அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு நகர்ப்புற நிலவரியிலிருந்து அரசு விலக்களித்துள்ளது.
இது சம்பந்தமான அரசு உத்தரவு விவரம் வருமாறு:
கல்வி, மதம் மற்றும் அறக்கொடை நிறுவனங்களில் இருந்தும், லாப நோக்கத்துடன் நடைபெறாத மனமகிழ் மன்றங்கள் (கிளப்), சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்தும் நகர்ப் பகுதிகளில் உள்ள 40 சொத்துக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி அதிகமாக இருப்பதாகவும் இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானம், அந்த நிறுவனம் எந்த குறிக்கோளுக்காக நிறுவப்பட்டதோ அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற போதுமானதாக இல்லை என்றும் அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
Advertisement
Advertisement
மாநிலத்தில் உள்ள சினிமா தொழிலில் நிலவி வரும் நிதி நெருக்கடியின் காரணமாக சினிமா ஸ்டூடியோக்களுக்கு நகர்ப்புற நிலவரியிலிருந்து சலுகை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து அரசாங்கம் அடியிற் கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.
1. எந்தக் குறிக்கோளுக்காக ஒரு நிறுவனம் நடத்தப்படுகிறதோ அந்தக் குறிக்கோளுக்காக நிலம் அல்லது கட்டிடத்தின் வருமானம் முழுவதும் உபயோகப்படுத்தப்படுமேயானால் கல்வி, மதம் மற்றும் அறக்கொடை நிறுவனங்களுக்கு (டிரஸ்ட்) நகர்ப்புற நில வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படும்.
2. இந்தச் சலுகை 1975-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியிலிருந்து கொடுக்கப்படும்.
3. காலி நிலத்தை அந்த நிறுவனம் விற்பனை செய்வதாகவோ அல்லது இனாமாக கொடுப்பதாகவோ இருந்தால் 1.7.75 முதல் உரிமை மாற்றத் தேதி வரை நகர்ப்புற நிலவரி கணக்கிடப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது.
4. சமூக மனமகிழ் மன்றங்கள், போக்கு சங்கங்கள் (பொழுது கிளப்புகள்) ஆகியவற்றின் காலி நிலங்களுக்கும் கட்டிடங்களுக்கும் வரியானது 50 சதவிகிதம் குறைக்கப்படும். இந்தச் சலுகை 1.7.75 முதல் அளிக்கப்படும்.
5. சினிமா ஸ்டூடியோக்களின் காலி நிலங்களுக்கும் கட்டிடங்களுக்கும் நகர்ப்புற நில வரி 50 சதவிகிதம் குறைக்கப்படும். இச்சலுகை 1.7.75 முதல் அளிக்கப்படும். ...
நடுவானில் இரு விமானங்களுக்கு இடையில் சண்டை; ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது
மெக்ஸிகோநகர், செப்.17 - நடு வானில் இரு விமானங்களுக்கிடையில் கடும் சண்டை ஏற்பட்டு, அதில் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. போதைப் பொருள்களைக் கடத்தும் இரு கோஷ்டிகளுக்கு இடையில் நடந்த சண்டையாக இருக்கலாம் இது என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இரு தினங்களுக்கு முன்பு மெக்ஸிகோ வட பகுதியில் நடந்தது.
இரு விமானங்களுக்கிடையில் கடும் சண்டை நடந்தது என்றும், ஒரு விமானம் தீப்பற்றி நொறுங்கி விழும்வரை இந்தச் சண்டை நடித்தது என்றும் இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட போலீசார் கூறுகின்றனர்.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் இடிபாடுகளில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்தது தெரிந்தது.
சேதமின்றித் தப்பிய விமானம், விழுந்த விமானத்தின் அருகில் இறங்கி, அந்த விமானம் நன்கு எரித்துவிட்டதா என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட பிறகு பறந்து சென்றுவிட்டது.
விமானம் விழுந்த இடத்தில் சடலங்கள் எதுவும் காணப்படவில்லை. அதன் பைலட்டும், பயணிகளும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
19.9.1976 - Urban Land Tax - Full exemption for religious institutions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.