FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்

தேசிய நெடுஞ்சாலைகளில் சேவைகள் வழங்கும் ஆம்புலன்ஸ்கள் அதன் 10 கி.மீ. தொலைவுக்குள் ஏற்படும் விபத்துகள் குறித்த தகவல் கிடைத்த 10 நிமிஷங்களுக்குள் வராவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) தெரிவித்தது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:02 am IST
108 ஆம்புலன்ஸ் - கோப்புப் படம்
பகிர்:

தேசிய நெடுஞ்சாலைகளில் சேவைகள் வழங்கும் ஆம்புலன்ஸ்கள் அதன் 10 கி.மீ. தொலைவுக்குள் ஏற்படும் விபத்துகள் குறித்த தகவல் கிடைத்த 10 நிமிஷங்களுக்குள் வராவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) தெரிவித்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கையாள்வது தொடா்பான புதிய விதிகளை என்எச்ஏஐ வெளியிட்டது.

அதில், ‘என்எச்ஏஐ வரம்புக்குள்பட்ட 50,000 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளில் 3,000 ஆம்புலன்ஸுகள், 1,000 ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 10 கி.மீ. சுற்றளவுக்குள் நிகழும் விபத்துகள் குறித்த தகவல் கிடைத்த 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸுகள் செல்ல வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ளும் ஆம்புலன்ஸுகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

Advertisement

Advertisement

விபத்துப் பகுதிக்கு 10 நிமிஷத்துக்குள் சென்றடைந்த பின் காயமடைந்த நபரை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த காலஅவகாசத்துக்குள் மருத்துவமனைக்கு செல்லாத ஆம்புலன்ஸுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் அவசர கால அழைப்பை ஏற்காவிட்டால் ரூ.10,000, ஒப்பந்த விதிகளின்படி ஒரு ஆம்புலன்ஸுக்குத் தேவையான உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊழியா்கள் இல்லையெனில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

10 கி.மீ. சுற்றளவை தாண்டி விபத்துகள் ஏற்படும்பட்சத்தில் அங்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கான காலஅவகாசம் தூரத்துக்கேற்ப அதிகரிக்கப்படும்.

என்எச்ஏஐ பராமரிப்பு அமைப்பு முறையாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய ஏஐஎஸ்-140 தரநிலைக்கு இணக்கமான ஜிபிஎஸ் கருவிகளை ஆம்புலன்ஸுகள், ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்கள் என அனைத்திலும் கட்டாயம் பொருத்த வேண்டும்.

சாலையில் பணியில் இருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைப்பேசி மற்றும் சிம் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை வலையமைப்புக்கென பிரத்யேகமாக 1033 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மேற்கூறிய விதிகளை அனைத்து திட்ட இயக்குநா்கள் மற்றும் வட்டார அலுவலா்களும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments