என்டிஏ நடத்தும் தேர்வுகளில் தொடர் முறைகேடு! 50 பணியாளர்கள் நீக்கம்!
என்டிஏ நடத்தும் தேர்வுகளில் தொடர் முறைகேடு குறித்து மத்திய உயர் கல்வித்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது பற்றி...
தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் தொடர் முறைகேடு குறித்து மத்திய உயர் கல்வித்துறை அமைச்சகம் இன்று (ஆக. 17) விளக்கமளித்துள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது. என்டிஏ நடத்திய இந்தத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், என்டிஏவை கலைக்கக் கோரியும் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.
இதைத் தொடர்ந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு விடைத்தாள்களைக் கணினி மூலம் திருத்தும் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் முறைகேடுகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து, 87 பாடங்களுக்கான 2026 யுஜிசி நெட் தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடைபெற்றது. இதில், 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை என்டிஏ நேற்று வெளியிட்டது.
ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்கான மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உயர்கல்வித் துறை செயலர், தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் இன்று ஒரு சந்திப்பை நடத்தினார்.
தேர்வு தொடர்பான சமீபத்திய பிரச்னைகளைத் தொடர்ந்து, என்டிஏ எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது. மேலும், தேசிய தேர்வு முகமையை முழுவதுமாக சீர்திருத்த பிரகலாத் ஜோஷி உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இதுவரை என்டிஏவிலிருந்து 50 பணியாளர்களை நீக்கியுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையில் பல புதிய பதிவிகளுக்கான பணியாளர் நியமனங்கள் நடைபெற்று வருவதாகவும் என்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தேர்வு முறைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு என்டிஏ-க்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Union Ministry of Higher Education issued a clarification today (August 17) regarding the recurring irregularities in examinations conducted by the National Testing Agency (NTA).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.