தில்லி: சார்ஜ் செய்தபோது இ-ரிக்ஷா பேட்டரி வெடித்து 2 பேர் பலி!
தில்லியில் இ-ரிக்ஷா பேட்டரி வெடித்து 2 பேர் பலியானது பற்றி....
தில்லியில் பேட்டரி சார்ஜ் செய்தபோது இரண்டு இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியின் ரகுபீர் நகரில் உள்ள வாடகை வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது, அவர்கள் அந்த வீட்டில் இ-ரிக்ஷாவுக்கான கையடக்க பேட்டரிகளை சார்ஜ் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ரகுபீர் நகர், ஆர்-17, முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக காலை 5.24 மணியளவில் க்யாலா காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும், விசாரணை அதிகாரி மற்றும் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
Advertisement
Advertisement
அங்கு காயமடைந்த நிலையில் இருவர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் பிகாரின் பகல்பூரைச் சேர்ந்த 17 வயதான முகமது சுஃபேத் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான முகமது சஹ்மத் என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் இ-ரிக்ஷா ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர்.
சுஃபேத் தனது தந்தை முகமது நசீப் மற்றும் தாய்மாமன் முகமது சஹ்மத் ஆகியோருடன் அந்த வாடகை வீட்டில் வசித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் 3 பேரும் இ-ரிக்ஷா ஓட்டுநர்கள். இ-ரிக்ஷா பேட்டரிகளை சார்ஜ் செய்ய அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களின் குடும்பத்தினர் பிகாரின் பகல்பூரில் வசிக்கின்றனர்.
காயமடைந்த இருவரும் உடனடியாக குரு கோவிந்த் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தில்லி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், விசாரணையின் ஒரு பகுதியாக அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டது.
தீ விபத்துக்கான சரியான காரணம் அறியத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் போலீஸார் தெரிவித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த இடத்தில் இ-ரிக்ஷா பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்ட விதம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Two persons were killed after a fire broke out in a building in Raghubir Nagar, west Delhi, early Monday morning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.