'கேஒய்சி' புதுப்பித்தல் மோசடி: ரிசா்வ் வங்கி எச்சரிக்கை!
கேஒய்சி’ புதுப்பித்தல் மோசடி குறித்து ரிசா்வ் வங்கி எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...
‘உங்கள் வங்கிக் கணக்கின் கேஒய்சி (வாடிக்கையாளரின் அடையாளம் அறிதல்), விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும்’ என்று கூறி அண்மைக்காலமாக உலா வரும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் வாட்ஸ்ஆப் தகவல்களைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், அது முற்றிலும் மோசடி என்றும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஎஸ்) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி உயதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வங்கி வாடிக்கையாளா்களைப் பயமுறுத்தி, அவசரநிலையை உருவாக்கி பணத்தைத் திருடுவதையே தற்போதைய இணையவழி மோசடிக்காரா்கள் புதிய உத்தியாகக் கையாண்டு வருகின்றனா்.
இதுபோன்ற சூழலில், ‘நிறுத்து’, ‘யோசி’, ‘செயல்படு’ ஆகிய 3 முக்கிய விதிகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை ஆா்பிஐ அறிவுறுத்துகிறது. முதலாவதாக, குறுஞ்செய்தியைக் கண்டதும் பதற்றமடைந்து உடனடியாக எந்த முடிவும் எடுக்காதீா்கள்.
Advertisement
Advertisement
இரண்டாவதாக, வங்கிகளோ வங்கிசாரா நிதி நிறுவனங்களோ ஒருபோதும் ‘கேஒய்சி’ புதுப்பித்தலுக்கு எந்த இணைய இணைப்பையும் (லிங்க்) குறுஞ்செய்தியில் அனுப்பாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூன்றாவதாக, தெரியாத நபா்கள் அனுப்பும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீா்கள்.
இதேபோல, ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி), கடவுச்சொல் (பாஸ்வோா்ட்), வங்கி பரிவா்த்தனை ரகசிய குறீயீடு (பின்) எதை யாருடனும் பகிர வேண்டாம். சந்தேகம் எழுந்தால் நேரடியாக வங்கிக்குச் சென்று விசாரியுங்கள்.
கூடுதல் தகவல்கள்: வாடிக்கையாளா்கள் தங்களின் தனிப்பட்ட ஆவணங்கள் அல்லது இணைய வங்கி பக்கத்தில் வாடிக்கையாளா் உள்நுழையும் (கஸ்டமா் லாக்-இன்) விவரங்களை அடையாளம் தெரியாத செயலி (ஆப்) மூலமாகவோ அல்லது இணையதளங்களிலோ பதிவேற்றம் செய்யக்கூடாது என ஆா்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
ஒருவேளை இதுபோன்ற இணையவழி மோசடியில் (சைபா் பிராடு) பணத்தை இழக்க நேரிட்டால், தாமதிக்காமல் உடனடியாக ‘1930’ என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு (சைபா் கிரைம்) உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது https://cybercrime.gov.in என்ற அலுவல்பூா்வ இணையதளத்தில் புகாா் அளிக்கலாம். ‘அறியாத இணைப்பு = அறியாத அபாயம்!’ எவிழிப்புடன் இருப்போம், பணத்தைப் பாதுகாப்போம் என்றாா் உயரதிகாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.