ஜென்-ஸீ ஆதரவுக்கு மத்திய அரசு புது முயற்சி! நாள்தோறும் ஒரு பல்கலை.க்கு ஒரு அமைச்சர் பயணம்!
இளம் தலைமுறையினரின் ஆதரவைப் பெறுவதற்கு மத்திய அரசு புதிய திட்டம்...
ஜென் - ஸீ இளைஞர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, நாள்தோறும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு ஒரு மத்திய அமைச்சரை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர். கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகளும் பங்கேற்றனர்.
இதன் விளைவாக, மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தார். இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதல் மற்றும் வன்முறைகளால் விரிசலடைந்துள்ள இளைஞர்கள் உடனான உறவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், “ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்” எனும் புதிய திட்டத்தின் மூலம், மத்திய அமைச்சர் ஒருவர் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்துக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவார் எனவும், மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிவதுடன் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்கள் தொடர்பாகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைச்சர்கள் இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா ஆகியோர் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய திட்டம் குறித்த வரையறை, இன்று (ஆக. 19) நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் தரவுகளின்படி இந்தியா முழுவதும் 57 மத்திய மற்றும் 522 மாநிலப் பல்கலைக்கழகங்கள் உள்பட 1,300-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Central Government plans to send a Central Minister to a university every day in an effort to garner support from Gen-Z youth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.