நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! பட்டியல் வெளியீடு!
நேபாள வெள்ளத்தில் 30-க்கும் அதிகமான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைக் காணவில்லை என அறிவிப்பு...
நேபாள வெள்ளத்தில், இந்தியா உள்பட 30-க்கும் அதிகமான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைக் காணவில்லை என நேபாளத்தின் தேசிய சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது.
திபெத்தையொட்டி இருக்கும் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை (ஆக. 26) காலை திடீரென வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டமைப்புகள் அடித்துச் செல்லும் விடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் பேரிடரில், இதுவரை 270 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், 288 இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களில் 30-க்கும் அதிகமான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக, நேபாளத்தின் தேசிய சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது.
ஆன்மீகச் சுற்றுலா சென்ற பெரும்பாலானோர் இந்தப் பேரிடரில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 179 இந்தியர்களைக் காணவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், பெரும்பாலானோர் திபெத்தில் உள்ள கைலாய மலைக்குச் செல்வதற்காகப் பயணம் மேற்கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் தேசிய அளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 270 பேர் பலியானதாகவும், 113 நேபாள சுற்றுலாப் பயணிகள் மற்றும் 85 பாதுகாப்புப் படையினர் உள்பட 826 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சீனாவின் கியிரோங் மாகாணத்தைச் சேர்ந்த 558 பேரைக் காணவில்லை எனவும், இவர்களில் 270 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திலும், 100-க்கும் அதிகமான சீன மக்களைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இத்துடன், அமெரிக்கா - 65 பேர், மலேசியா - 51 பேர், உக்ரைன் - 55 பேர், ஆஸ்திரேலியா - 35 பேர், பிரிட்டன் - 33 பேர், கனடா - 25 பேர், தென் கொரியா - 9 பேர் (நீர்மின் நிலையத்தில் பணிப்புரிந்த அரசுப் பணியாளர்கள்), சிங்கப்பூர் - 8 பேர், ஜெர்மனி - 8 பேர், ரஷியா - 8 பேர், தென்னாப்பிரிக்கா - 6 பேர், லாட்வியா - 6 பேர், ஜப்பான் - 5 பேர், நியூசிலாந்து - 5 பேர், பிரான்ஸ் - 4 பேர், பெல்ஜியம் - 3 பேர், ஸ்பெயின் - 3 பேர் மற்றும் கசகஸ்தான், இத்தாலி, போர்ச்சுகல், ஐயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலா இருவரும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
The National Tourism Board has announced that nationals from more than 30 countries are missing following the floods in Nepal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.