போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: புதினுடன் பிரதமர் மோடி பேச்சு
அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து...
உக்ரைன் - ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று கிர்கிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகருக்குச் சென்ற அவர்க்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து பிஷ்கெக் நகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேசியதாவது:
''உக்ரைன் விவகாரம் குறித்து நாம் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். நாம் முன்பு சந்தித்தபோது, இவ்விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நீங்கள் எனக்கு விரிவாக விளக்கம் அளித்தீர்கள்.
அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. தொடர்ந்து ஆதரிக்கும். போரில் கழியும் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தைப் பின்னோக்கி இழுக்கிறது. ஆனால், அமைதியை நோக்கிய ஒவ்வொரு நடவடிக்கையும் மனிதகுலத்திற்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
முடிவில்லாத போரிலிருந்து விலகி, போரை முடிவுக்குக் கொண்டுவரும் திசையில் நாம் நகர வேண்டும். மனிதகுலத்தின் நலனுக்கு இது அவசியம்.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் கூடிய விரைவில் அமைதியான தீர்வு காண வேண்டும் என்பதே மனிதகுலத்தின் குரலாக உள்ளது.
காந்தி மற்றும் புத்தரின் பூமி ஒரே அமைதி என்ற ஒரே செய்தியைத்தான் முன்வைக்கிறது. இன்று, இதுகுறித்த விஷயங்களை உங்களுடன் விவாதிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சில நாட்களில் இந்தியா பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. உங்களையும் உங்கள் தூதுக்குழுவினரையும் வரவேற்க அனைத்து இந்தியர்களும் ஆவலுடன் உள்ளனர்.
உங்கள் வருகையானது நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், பிரிக்ஸ் கட்டமைப்பிற்குள் கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்தும்'' என மோடி பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.