பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்ததால் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றனர் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று (பிப்.5) மாலை பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.
பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி பேசுகையில், “காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்காக மாற்றம் கொண்டு வந்தோம், பாகிஸ்தான் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரத்தை ஒழித்தேன். இதனால், எதிர்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர்.
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கோஷங்கள் எழுப்பலாம். ஆனால், எனக்கு நீங்கள் சவக்குழி தோண்ட முடியாது.
காங்கிரஸ் ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்து சிறு, குறு விவசாயிகளுக்காக ரூ. 4 லட்சம் கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளின் தேவைகளை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை.
நர்மதை நதியின் மீது கட்டப்படவிருந்த சர்தார் சரோவர் அணை திட்டத்தை (1961 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் நாட்டப்பட்டு தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு இருந்தது) நிறைவேற்றாமல் இருந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் தீய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
கொள்கைகளை அமல்படுத்துவது குறித்து சில எம்.பி.க்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பற்றி நன்கு தெரிந்தும் அதனை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது தந்தை நேரு உருவாக்கிய திட்டக்குழுவை இந்திரா காந்தி கலைத்தார்.
நாங்கள் 2014 ஆம் ஆண்டில் ஆட்சி அமைத்தப் பிறகு திட்டக்குழுவை அமைத்து நீதி ஆயோக் அமைப்பை உருவாக்கினோம். இந்த அமைப்பு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது” எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.