ரூ.100 கோதுமை திருட்டு: 45 ஆண்டுகளுக்குப் பிறகு ம.பி.யைச் சேர்ந்த நபர் கைது
மத்தியப் பிரதேசத்தில் ரூ.100 மதிப்பிலான கோதுமையைத் திருடியதற்காகத் தப்பி ஓடிய நபர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் ரூ.100 மதிப்பிலான கோதுமையைத் திருடியதற்காகத் தப்பி ஓடிய நபர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம், பல்காட் கிராமத்தைச் சேர்ந்த சலீம் தனக்கு 20 வயது இருந்தபோது 1980 ஆம் ஆண்டு அவரும் மேலும் ஆறு பேரும் பலசமுந்த்-காகட் பகுதியில் உள்ள வயல்களில் இருந்து கோதுமையைத் திருடியுள்ளனர். அந்தத் திருட்டின் மதிப்பு 100 ரூபாய் என்று அதிகாரி கூறினார்.
அந்த நேரத்தில் ஒரு குவிண்டால் நல்ல தரமான கோதுமையின் விலை 115 ரூபாய் அல்லது கிலோ ஒன்றுக்கு 1.15 ரூபாய் ஆக இருந்தது. திருட்டுக்குப் பிறகு சலீம், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பிறகு தார் மாவட்டத்தில் உள்ள பாக் நகரில் தனது மகனுடன் மளிகைக் கடை நடத்தி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்ததுடன், சலீமுக்கு எதிராக வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேறொரு குற்றவாளியைத் தேடும் போது, சைபர் பிரிவு உதவியுடன் பாக் நகரில் உள்ள அவரது மளிகைக் கடையில் சலீம் கண்டுபிடிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் கோதுமை திருட்டு வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு மறக்கப்பட்டிருக்கும் என்றும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தான் பாதுகாப்பாக இருப்பேன் என்றும் தான் நம்பியதாக சலீம் போலீஸாரிடம் கூறியுள்ளார். முஜாஹித்தின் மகனான சலீம், பிறகு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.