பிரதமர் தொடக்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு இல்லை: திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி தொடக்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு தவிர்ப்புக்கு திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு தவிர்க்கப்பட்டதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து குவாஹாட்டிக்கு இயக்கப்படும் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி, ஜன. 17 ஆம் தேதியில் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்த நிலையில், இந்த வந்தே பாரத் ரயிலின் உணவுப் பட்டியலில் அசைவ உணவு இடம்பெறவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து, திரிணமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "முதலில் அவர்கள் எங்கள் வாக்குகளைக் கண்காணித்தனர். தற்போது, எங்கள் தட்டுகளையும் (உணவு) அவர்கள் கண்காணிக்கின்றனர்.
Advertisement
Advertisement
மேற்கு வங்கத்தில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி பெருமையாகப் பேசினார். ஆனால், இந்த ரயிலின் உணவுப் பட்டியலில் மீன் மற்றும் இறைச்சி நீக்கப்பட்டிருப்பது குறித்து அவர் விவரிக்கவேயில்லை.
அசைவ உணவை விரும்பும் மக்கள் வசிக்கும் இரு பகுதிகளை இணைக்கும் ஒரு ரயில், இப்போது சைவ உணவுகளை மட்டுமே வழங்குகிறது.
மீன் உண்ணும் மேற்கு வங்கத்தினரை முகலாயர்கள் என்று பிரதமர் மோடி கேலி செய்கிறார்.
தில்லியில் மீன்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிக்கன் உணவுகளை விற்றதற்காக ஓர் ஏழை வியாபாரி கொடூரமாகத் தாக்கப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை பாஜக தீர்மானிப்பதாகக் குற்றம் சாட்டிய திரிணமூல் காங்கிரஸ், நாளை நாம் எந்த உடை அணிய வேண்டும் யாரை நேசிக்க வேண்டும் என்பது முக்கியம் என்றும் கூறியுள்ளனர்.
வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு தவிர்ப்பு குறித்த திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ரயில்வே துறை, காமாக்யா தேவி கோயில் மற்றும் காளி தேவி கோயில் ஆகிய இரண்டு புனித இடங்களை இந்த வந்தே பாரத் ரயில் இணைப்பதால்தான், அசைவ உணவுகளைச் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.
இருப்பினும், மேற்குறிப்பிட்ட இரு கோயில்களிலும் இன்றளவிலும் ஆடுகள் மற்றும் எருமைகள் பலியிடப்படும் வழிபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Trinamool Congress slams vegetarian-only menu on Vande Bharat sleeper
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.