தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! அமைச்சரவையில் துறை மாற்றி அளிக்கப்படுமா?
பதவி விலகியுள்ள தர்மேந்திர பிரதானுக்கு மத்திய அமைச்சரவையில் துறை மாற்றி அளிக்கப்படுமா? எனக் கேள்வி...
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, பதவி விலகியுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குத் துறை மாற்றி அளிக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் நோக்கி கடந்த ஜூலை 20 அன்று சிஜேபி தலைமையில் நடைபெற்ற பேரணியில் தில்லி காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர்.
காவல் துறையினரின் தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீட் தேர்வுக்கு எதிராகவும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் போராட்டங்கள் வெடித்தன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) பதவி விலகியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்ற தர்மேந்திர பிரதான், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், பதவி விலகியுள்ள தர்மேந்திர பிரதானுக்கு மாற்று துறை வழங்கப்படக் கூடாது எனவும், அவர் அமைச்சரவையில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டுமெனவும் மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுபற்றி, இன்று காலை செய்தியாளர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,
“தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையில் துறை மாற்றம் செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. அந்தப் பேச்சுக்கே இங்கு இடமில்லை. அவர் முற்றிலுமாகப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
ஆனால், கல்வித்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ள தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையில் நீடிப்பாரா? என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இருப்பினும், 12 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையின் அனுபவம் கொண்ட தர்மேந்திர பிரதானுக்கு விரைவில் மாற்று துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில், மக்கள் போராட்டத்தின் விளைவாக ராஜிநாமா செய்த முதல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Opposition parties have insisted that Dharmendra Pradhan should not be allocated a different portfolio.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.